Published : 22 Jul 2025 06:49 AM
Last Updated : 22 Jul 2025 06:49 AM
புதுடெல்லி: மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் ஜன் ஆரோக்யா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி, குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில், ஆயுஷ்மான் வயா வந்தனா திட்டத்தின்படி, 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் (வருமானத்தை கணக்கில் கொள்ளாமல்) ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு இலவசமாக வழங்கப்படுகிறது.
இதனிடையே, சிறையில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட கைதிகளுக்கு இந்த திட்டத்தின் பலன் கிடைக்கவில்லை என பிரியங்க் கனூங்கோ தலைமையிலான தேசிய மனித உரிமை ஆணைய அமர்வில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் தேசிய மனித உரிமை ஆணையம் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சிறைத் துறை இயக்குநர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஆயுஷ்மான் வயா வந்தனா மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் பலன் 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து கைதிகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆயுஷ்மான் இணையதளத்தில் அவர்களுடைய பெயரை பதிவு செய்ய வேண்டும்.
இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் எத்தனை கைதிகள் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை 4 வாரத்துக்குள் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT