Published : 22 Jul 2025 06:35 AM
Last Updated : 22 Jul 2025 06:35 AM
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து அடுத்த வாரம் மக்களவையில் 16 மணி நேரம், மாநிலங்களவையில் 9 மணி நேரம் விவாதம் நடைபெறும் என்று அலுவல் ஆலோசனைக் குழு அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. மக்களவை கூடியதும் காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோர், அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதன்பிறகு ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் கோஷமிட்டனர். இதனால் அவையில் கடும் அமளி நிலவியது.
“எம்பிக்கள் அமைதி காக்கவேண்டும். கேள்வி நேரத்துக்கு பிறகு ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்கலாம்” என்று அவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார். இதை ஏற்க மறுத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து நண்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
அவை மீண்டும் கூடிய போது. எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் அதே கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். அப்போது நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறும்போது. “பிற்பகல் 2.30 மணிக்கு மக்களவை அலுவல் ஆலோசனைக் குழு கூடுகிறது. இந்த இடத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும்” என்று உறுகு அளித்தார்.
ஆனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து கோஷமிட்டனர். இதைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் மக்களவை கூடியபோது எதிர்க்கட்சிகள் மீண்டும் கோஷம் எழுப்பின. இதனால் பிற்பகல் 4 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மாலையில் மக்களவை கூடியபோது அதே நிலை நீடித்தது. இதைத் தொடர்ந்து நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
மசோதா நிறைவேற்றம்: மாநிலங்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது.ஆபரேஷன் சிந்தூர் குறித்து மாநிலங்களவையில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவையில் பேசினார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா கூறும்போது, “ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான அனைத்து தகவல்களும் நாட்டு மக்களிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ராணுவ நடவடிக்கை குறித்து மாநிலங்களவையில் விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.
பிற்பகலில் மாநிலங்களவை கூடியபோது, பில் ஆப் லேடிங் மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. பில் ஆப் லேடிங் என்பது சரக்குகளை எடுத்துச் செல்பவர்கள், சரக்கின் உரிமையாளர்களுக்கு வழங்கும் ஆவணம் தொடர்பானது ஆகும். கடந்த 1856-ம் ஆண்டு மசோதாவுக்கு பதிலாக தற்போது மாநிலங்களவையில் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதன்பிறகு எம்பிக்களின் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில், மக்களவை அலுவல் ஆலோசனைக் குழு நேற்று பிற்பகலில் கூடி ஆலோசனை நடத்தியது. அப்போது ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் அடுத்த வாரம் 16 மணி நேரம் விவாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதேபோல ஆபரேஷன் சிந்தூர் குறித்து மாநிலங்களவையில் அடுத்த வாரம் 9 மணி நேரம் விவாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து நாடாளுமன்ற வட்டாரங்கள் கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 23 முதல் 26-ம் தேதி வரை வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். எனவே ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் விவாதம் நடத்தப்பட உள்ளது’’ என்று தெரிவித்தன.
பிரதமர் ஆலோசனை: பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா, நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு, அர்ஜுன்ராம் மேக்வால் மற்றும் பாஜக மூத்த எம்.பி.க்கள் பங்கேற்றனர். சுமார் 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT