Published : 20 Jul 2025 03:02 PM
Last Updated : 20 Jul 2025 03:02 PM
புதுடெல்லி: ஐந்து ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்த ட்ரம்பின் கருத்துக்கு பதிலளிக்குமாறு ராகுல் காந்தி நேற்று கேள்வியெழுப்பியிருந்தார். இதனை விமர்சித்துள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘தொடர்ச்சியான தோல்விகள் ராகுல் காந்தியை சித்தாந்த வெறுமையின் படுகுழியில் தள்ளியுள்ளது' என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தொடர்ச்சியான தோல்விகள் ராகுல் காந்தியை சித்தாந்த வெறுமையின் படுகுழியில் தள்ளியுள்ளது. பாஜகவை எதிர்ப்பதில் தொடங்கி, அவர் இந்தியாவையே எதிர்க்கும் நிலையை அடைந்துவிட்டார். நாட்டின் கண்ணியத்தை கெடுக்க அவருக்கு ஒரு சாக்கு தேவைப்படுகிறது. சில நேரங்களில் அவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுகிறார், சில சமயங்களில் அவர் மற்ற நாடுகளின் கதைகளை ஊக்குவிக்கிறார்.
இந்திய வரலாற்றில் மிகவும் தோல்வியுற்ற தலைவராக இருப்பதன் விரக்தியை தேசத்திற்கு எதிராகப் பேசுவதன் மூலம் வெளிப்படுத்துகிறார். "விரக்தியடைந்த பூனை கம்பத்தை சொறிகிறது” என்ற ஒரு பழமொழி ராகுல் காந்திக்கு சரியாகப் பொருந்துகிறது. காலையில் எழுந்ததும், இந்தியாவை இழிவுபடுத்த ஏதோவொரு அடிப்படையற்ற பிரச்சினை கிடைக்குமா என ராகுல் காந்தி ஆவலுடன் காத்திருக்கிறார்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று ராகுல்காந்தி, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்த உதவியதாகவும், அதில் ஐந்து ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்பிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT