Published : 19 Jul 2025 07:22 AM
Last Updated : 19 Jul 2025 07:22 AM
அமேதி: உத்தர பிரதேசம் அமேதி தொகுதியில் இந்தியா-ரஷ்யா நிறுவனங்கள் கூட்டாக தயாரிக்கும் துப்பாக்கி தொழிற்சாலை (ஐஆர்ஆர்பிஎல்) உள்ளது.
இங்கு ஏ.கே.203 ரக துப்பாக்கிகள் தயார் செய்யப்படுகின்றன. இதற்கு ‘ஷேர்’ என பெயரிடப்பட்டது. இந்த துப்பாக்கி ஒரு நிமிடத்தில் 700 குண்டுகளை, 800 மீட்டர் இலக்குவரை சுடுகிறது. இந்த நிறுவனத்தில் ராணுவத்தின் முப்படைகளுக்கு 6 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏ.கே.203 ரக துப்பாக்கிகளை வழங்க ரூ.5,200 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
இதுவரை இந்நிறுவனம் 48,000 துப்பாக்கிகளை விநியோகித்துள்ளது. அடுத்த 3 வாரங்களில் 7,000 துப்பாக்கிகள் விநியோகிக்கப்படவுள்ளன. இந்தாண்டு இறுதிக்குள் மேலும் 15,000 துப்பாக்கிகள் விநியோகிக்கப்படவுள்ளன.
இந்த ஏ.கே.203 ரக துப்பாக்கிகள், ஏ.கே-47 மற்றும் ஏகே-56 துப்பாக்கிகளை விட மிகவும் நவீனமானவை. பாதுகாப்புத்துறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்படும் இன்சாஸ் ரக துப்பாக்கிகள் 4.15 கிலோ எடையும் 960 எம்எம் நீளமும் கொண்டவை.
ஆனால், இந்த ஏகே-203 ரக துப்பாக்கி 3.8 கிலோ எடையுடனும், 705 எம்எம் நீளத்திலும் இருப்பதால் வீரர்களால் எளிதாக கையாள முடியும். இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு இந்த துப்பாக்கிகள் வழங்கப்படவுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT