Published : 18 Jul 2025 07:49 AM
Last Updated : 18 Jul 2025 07:49 AM
ஜெய்ப்பூர்: இந்தியாவுக்கு துரோகம் செய்தால் அதன் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறினார். சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025-ஐ முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற விழாவில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.
விழாவில் அவர் பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்திய மக்களுக்கும், அதன் எல்லைக்கும், அதன் பாதுகாப்பு படைகளுக்கும் துரோகம் செய்யக் கூடாது என்ற வலுவான செய்தி உலகுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு துரோகம் செய்பவர்கள் அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
நாட்டை பாதுகாப்பதில் பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய பணியை செய்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியின்போது, கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் தீவிரவாத தாக்குதல்களால் நாடு பாதிக்கப்பட்டது.
அடுத்த 100 ஆண்டுகள் கூட்டுறவுக்கான ஆண்டுகளாக இருக்கும். கூட்டுறவுச் சங்கங்களை ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒவ்வொரு ஏழைக்கும், ஒவ்வொரு விவசாயிக்கும் கொண்டு செல்லும் நோக்கத்தில் மத்தியில் கூட்டுறவு அமைச்சகம் தனி அமைச்சகமாக நிறுவப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர் அமித் ஷா பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT