Published : 13 Jul 2025 06:02 AM
Last Updated : 13 Jul 2025 06:02 AM
திருவனந்தபுரம்: செவிலியர் நிமிஷா பிரியாவின் உயிரைக் காப்பாற்றுவதற்காக ரூ.8.60 கோடி குருதிப் பணம் தருவதற்கு குடும்பத்தார் முன்வந்துள்ளனர்.
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர், செவிலியர் நிமிஷா பிரியா. 38 வயதாகும் நிமிஷா பிரியா மேற்காசிய நாடான ஏமனில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அங்கு தன்னுடன் பங்குதாரராக இருந்த ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்டோ மெஹ்தி என்பவரை விஷ ஊசி போட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. அவருக்கு வரும் 16-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், மரண தண்டனையை தடுத்து நிறுத்தக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நிமிஷா பிரியாவின் உயிரைக் காப்பாற்றுவதற்காக பாலக்காட்டில் உள்ள அவரது குடும்பத்தார் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் தலால் அப்டோ மெஹ்தி குடும்பத்தாருக்கு ரூ.8.60 கோடி குருதிப் பணத்தைக் கொடுக்க நிமிஷா பிரியாவின் குடும்பத்தார் முன்வந்துள்ளனர். இந்தப் பணத்தை மெஹ்தி குடும்பத்தார் ஏற்றுக்கொண்டால், நிமிஷா பிரியாவின் தண்டனை ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தண்டனை குறையுமா..? - ஷரியா என்று அழைக்கப்படும் இஸ்லாமிய சட்டத்தில் தியா அல்லது குருதிப் பணம் என்பது ஒரு வகையான நீதியாகக் கருதப்படுகிறது.கொலை, காயப்படுத்துதல், சொத்துகளைச் சேதப்படுத்துதல் போன்ற பல்வேறு வகையான குற்றங்களுக்கு இது பொருந்தும். இந்த குருதிப் பணத்தை வழங்குவதன் மூலம் தண்டனையைக் குறைக்கலாம் அல்லது முழு மன்னிப்பும் பெறலாம். இந்த வகையிலான சட்ட முறை தற்போது மத்திய கிழக்குப் பகுதி மற்றும் ஆப்பிரிக்காவில் சுமார் 20 நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.
குருதிப் பணம் என்பது முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கொலை வழக்குகளுக்கு, 100 ஒட்டகங்கள் போன்ற இழப்பீடுகளை வழங்கலாம் என்று இஸ்லாமியர்களின் இறைத்தூதர் முகமது நபியால் விளக்கப்பட்டுள்ளது என்று முஸ்லிம் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், தற்போது இந்த இழப்பீடு தியா எனப்படும் பணமாகப் பெரும்பாலும் வழங்கப்படுகிறது. எவ்வளவு இழப்பீடு வழங்கப்படும் என்பது கொலை வழக்கு மற்றும் அந்நாட்டின் சட்டங்களைப் பொறுத்தது என்று தெரியவந்துள்ளது.
இதனுடன் குருதிப் பணமாகப் பெறப்படும் தொகையை யாருக்கு வழங்குவது என்பதும் முடிவு செய்யப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பணம் பெறுவதற்கு உரிமையுடையவர்கள் என்றால், அவர்களிடையே அதை விநியோகிப்பதற்கும் விதிகள் உள்ளன என்று முஸ்லிம் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
பேச்சுவார்த்தை: இதுகுறித்து நிமிஷா பிரியாவைக் காப்பாற்றுவதற்காக அமைக்கப்பட்ட கவுன்சிலைச் சேர்ந்த பாபு ஜான் என்பவர் கூறும்போது, “கொலை செய்யப்பட்ட மெஹ்தி குடும்பத்தாருக்கு குருதிப் பணம் வழங்குவதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக நிமிஷாவின் குடும்பத்தைச் சேர்ந்த சாமுவேல் ஜெரோம் ஏமனில் உள்ளார்.
நிமிஷாவின் சார்பில் தற்போது ரூ.8.60 கோடியை மெஹ்தி குடும்பத்தாருக்கு குருதிப் பணம் தரப்படும் என அறிவித்துள்ளோம். இதற்கு மெஹ்தியின் குடும்பத்தார் எந்தவித பதிலையும் இதுவரை வழங்கவில்லை. அந்த குடும்பத்தார் பணத்தை ஏற்க ஒப்புக்கொண்டால், உடனடியாக பணத்தைத் திரட்டி அளித்துவிடுவோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT