Last Updated : 12 Jul, 2025 05:48 PM

 

Published : 12 Jul 2025 05:48 PM
Last Updated : 12 Jul 2025 05:48 PM

சத்தீஸ்கரில் ரூ.1.18 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட 23 மாவோயிஸ்டுகள் சரண்

சுக்மா: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) 23 மாவோயிஸ்டுகள் காவல்துறையினர் முன்பு சரணடைந்தனர். இவர்களைப் பற்றிய தகவல் தருவோருக்கு மொத்தமாக ரூ.1.18 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கையை மத்திய அரசும், மாநில காவல்துறையும் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பல முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்கள், காமாண்டோக்கள் கடந்த சில மாதங்களில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனையடுத்து பல மாவோயிஸ்டுகள் தற்போது காவல்துறையிடம் சரணடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், சுக்மாவில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 9 பெண்கள் உட்பட 23 மாவோயிஸ்டுகள் இன்று சரணடைந்தனர். இவர்களில் பலர் உயர் பதவியில் உள்ள மாவோயிஸ்டுகள் ஆவர். இவர்களை பற்றிய தகவல் வழங்குவோருக்கு தனித்தனியாக ரூ1.18 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.

சுக்மா காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கூட்டு முயற்சியின் காரணமாக இவர்கள் சரணடைந்தனர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவோயிஸ்டுகள் சரணடைதல் நிகழ்ச்சி சுக்மா காவல் கண்காணிப்பாளர் கிரண் சவான் மற்றும் சிஆர்பிஎஃப் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆனந்த் சிங் முன்னிலையில் நடைபெற்றது.

நேற்று சுக்மாவுக்கு அருகில் உள்ள நாடான்பூர் மாவட்டத்தில் 22 மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்த நிலையில், இன்று சுக்மாவில் 23 பேர் சரணடைந்துள்ளனர். இன்று சரணடைந்த மாவோயிஸ்டுகளில் ஒருவர் 2012-ம் ஆண்டு அப்போதைய மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனனை கடத்தியதில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது இந்த கடத்தல் சம்பவம் தேசிய அளவில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x