Published : 05 Jul 2025 06:19 AM
Last Updated : 05 Jul 2025 06:19 AM

இமாச்சலில் கனமழைக்கு இதுவரை 69 பேர் உயிரிழப்பு: ரூ.700 கோடிக்கு உள்கட்டமைப்புகள் சேதம்

புதுடெல்லி: இ​மாச்​சல பிரதேசத்​தில் பெய்து வரும் கனமழைக்கு இது​வரை 69 பேர் உயி​ரிழந்​துள்​ளனர்.

இமாச்சல பிரதேசத்​தில் பரு​வ​மழை தொடங்​கி​யுள்ள நிலை​யில் கடந்த சில நாட்​களாக அங்கு கனமழை பெய்து வரு​கிறது. பல நேரங்​களில் கிளவுட் பர்​ஸ்ட் எனப்​படும் மேகவெடிப்பு மழை பெய்து வரு​வ​தால் பல்​வேறு இடங்​களில் நிலச்​சரிவு ஏற்​பட்டு கடும் சேதம் விளைந்​துள்​ளது.

கனமழைக்கு இது​வரை அங்கு 69 பேர் உயி​ரிழந்​துள்ள நிலை​யில், மேலும் 40 பேர் காணா​மல் போயுள்​ளனர். அதி​கள​வாக மண்டி மாவட்​டத்​தில் மட்​டும் 37 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். கிட்​டத்​தட்ட மண்​டி​யில் மட்​டும் ரூ.400 கோடி அளவுக்கு பொருட்​சேதம் ஏற்​பட்​டுள்​ளது. கனமழை, ஆற்​றில் வெள்​ளம், நிலச்​சரிவு போன்​றவற்​றால் அங்கு மக்​களின் இயல்பு வாழ்க்கை முற்​றி​லும் முடங்கி உள்​ளது. மழை, வெள்​ளத்​தில் சிக்கி 110 பேர் படு​காயமடைந்​துள்​ளனர். அவர்​கள் சிகிச்​சைக்​காக அரசு மருத்​து​வ​மனை​களில் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர்.

மத்​திய அமைச்​சர் உறுதி: மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா எக்ஸ் வலைதள பதி​வில் கூறியிருப்​ப​தாவது; நாட்​டின் பல மாநிலங்​களில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்​து, குஜ​ராத், இமாச்சல பிரதேசம், ராஜஸ்​தான், உத்​த​ராகண்ட் மற்​றும் சத்​தீஸ்​கர் மாநில முதல்​வர்​களு​டன் பேசினேன். மக்​களுக்கு உதவ போதிய எண்​ணிக்​கையி​லான தேசிய பேரிடர் மீட்​புக் குழுக்​கள் மாநிலங்​களில் நிறுத்​தப்​பட்டு உள்​ளன.

தேவைப்பட்டால் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு கூடுதல் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்படுவார்கள். மத்​திய அரசிடம் இருந்து அளிக்​கப்​படும் சாத்​தி​ய​மான அனைத்து உதவி​களை​யும் அளிப்​ப​தாக உறுதி அளித்​தேன். இவ்​வாறு அமித் ஷா கூறி யுள்​ளார்.

7-ம் தேதிவரை கனமழை: இமாச்​சல பிரதேச மாநிலத்​தில் ஜூலை 7-ம் தேதி வரை கனமழை பெய்​யும் வாய்ப்பு உள்​ள​தாக இந்​திய வானிலை ஆய்வு மையம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. இதையடுத்து அங்கு பல இடங்​களில் முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

பலத்த மழை குறித்து இமாச்​சல் முதல்​வர் சுக்​விந்​தர் சிங் கூறிய​தாவது: பல மாவட்​டங்​களில் கனமழை பெய்து வரு​வ​தால் பல இடங்​களில் நிலச்​சரிவு ஏற்​பட்​டுள்​ளது. 14 இடங்​களில் மேகவெடிப்பு மழை பதி​வாகி​யுள்​ளது. பலத்த மழை காரண​மாக பல இடங்​களில் மின் இணைப்பு துண்​டிக்​கப்​பட்​டுள்​ளது. ஏராள​மான இடங்​களில் சாலைகள் அடித்​துச் செல்​லப்​பட்​டுள்​ளன. மழை​யால் பாதிக்​கப்​பட்​டுள்ள குடும்​பங்​களுக்கு தற்​காலிக நிவாரண​மாக ரூ.5 ஆயிரம் வழங்​கப்​படும்.

மழை​யால் மண்​டி​, துனாக், பாக்​சயேத் போன்ற இடங்​கள் வெகு​வாகப் பாதிக்​கப்​பட்​டுள்​ளன. மண்​டி​யில் மட்​டும் ஏராள​மானோர் காணா​மல் போய்​விட்​டனர். ஹமிர்​பூர், பிலாஸ்​பூர், கின்​னாவூர், குலு, லாஹவுல் ஸ்பிட்​டி, சிர்​மாவூர், சோலன், உனா மாவட்​டங்​களில் மழை​யால் பலர் இறந்​து​விட்​டனர்.

14 இடங்​களில் மழை, வெள்​ளத்​தால் பாலங்​கள் அடித்​துச் செல்​லப்​பட்​டுள்​ளன. 164 கால்​நடைகளும் உயி​ரிழந்​துள்​ளன. மழை​யால் பாதிக்​கப்​பட்​டுள்ள இடங்​களில் இருந்து பொது​மக்​களை மீட்டு நிவாரண மு​காம்​களில் தங்க வைத்​துள்​ளோம். அவர்​களுக்​குத் தேவை​யான உணவு, உடை ஆகியவை வழங்​கப்​பட்டு வரு​கிறது. இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x