Published : 04 Jul 2025 06:27 AM
Last Updated : 04 Jul 2025 06:27 AM
புதுடெல்லி: புத்த மதத் தலைவர் தலாய் லாமாவால் மட்டுமே தனது வாரிசை தேர்வு செய்ய முடியும் என்று சீனாவுக்கு இந்தியா பதில் அளித்துள்ளது.
திபெத்திய புத்த மதத் தலைவரான 14-வது தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம் அடைந்து, இமாச்சலில் உள்ள தர்மசாலாவில் வசித்து வருகிறார். அவர் தனது 90-வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்ட அறிவிப்பில், “எனது மறைவுக்கு பிறகும் தலாய் லாமா மரபுதொடரும். அடுத்த தலாய் லாமாவை அங்கீகரிக்கும் அதிகாரம் காடன் போட்ராங் அறக்கட்டளைக்கு மட்டுமே உள்ளது" என்று கூறியிருந்தார்.
ஆனால் இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், “தலாய் லாமா உள்ளிட்ட பவுத்த தலைவர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளுக்கு சீன அரசின் ஒப்புதலும் அங்கீகாரமும் அவசியம்" என்றார்.இந்நிலையில் பவுத்தரான மத்திய சிறுபான்மையினர் விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “அடுத்த தலாய்லாமா யார் என்பதை அதற்காக நிறுவப்பட்டுள்ள அமைப்பு மற்றும் தலாய் லாமாவின் விருப்பத்தின்படியே தீர்மானிக்கப்பட வேண்டும் என்றே தலாய் லாமாவை பின்பற்றும் அனைவரும் நினைக்கிறார்கள். தலாய் லாமாவையும் நடைமுறை மரபுகளையும் தவிர வேறு யாருக்கும் அதை தீர்மானிக்கும் உரிமை இல்லை" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT