Last Updated : 02 Jul, 2025 03:21 PM

1  

Published : 02 Jul 2025 03:21 PM
Last Updated : 02 Jul 2025 03:21 PM

மக்களின் தனிநபர் கடன் சராசரி ரூ.4.8 லட்சமாக அதிகரிப்பு: காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி: மக்கள் வாங்கும் தனி நபர் கடன்கள் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.3.9 லட்சத்தில் இருந்து ரூ.4.8 லட்சமாக அதிகரித்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கடந்த 11 ஆண்டுகளில் மோடி அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கியுள்ளது. மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அனைத்து கொள்கைகளும் முதலாளித்துவ நண்பர்களுக்காக மட்டுமே எடுக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்படும் இழப்புகளை இன்று நாட்டு மக்கள் அனுபவித்து வருகின்றனர். இந்த உண்மை ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு வகையில் நம் முன் வந்து கொண்டிருக்கிறது.

இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கை, இந்திய பொருளாதாரத்தின் கவலையளிக்கும் உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. நிபுணர்களின் உதவியை நாடுவதன் மூலம் உண்மையான குறைபாடுகளை மறைக்க அரசாங்கம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. எனினும், மோடி ஆட்சியில் நாட்டின் மீதான கடன் சுமை உச்சத்தில் உள்ளது என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது.

கடந்த 2 ஆண்டுகளில் தனிநபர் கடன் ரூ.90,000 அதிகரித்து ரூ.4.8 லட்சமாக உயர்ந்துள்ளது. கடனை திருப்பிச் செலுத்துவதில் மட்டுமே 25.7% வருமானம் செல்கிறது. அதிகபட்சமாக 55% கடன்கள் கிரெடிட் கார்டுகள், மொபைல் EMIகள் போன்றவற்றுக்குச் செல்கின்றன, அதாவது இந்த பணவீக்கத்தில், குடும்பங்கள் தங்கள் வருமானத்தில் வாழ முடியாமல் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பாதுகாப்பற்ற கடன்கள் 25% ஐத் தாண்டிவிட்டன.

மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், மார்ச் 2025-ன்படி இந்தியா, பிற நாடுகளுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் 736.3 பில்லியன் டாலர்களாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகம்.

நாட்டில், இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பணவீக்கத்தால் மக்கள் சிரமப்படுகிறார்கள். அரசியலமைப்பு நிறுவனங்கள் நசுக்கப்படுகின்றன. மக்கள் கடனில் மூழ்கி வருகின்றனர். ஆனால், மோடியின் சிறந்த நண்பர்கள் லாபம் ஈட்டுகிறார்கள். அவர்களின் செல்வம் அதிகரித்து வருகிறது.

நேரடி கேள்வி என்னவென்றால், அனைத்து அரசு திட்டங்களும் பொது தனியார் கூட்டாண்மை அல்லது தனியார் பங்களிப்பு மூலம் செய்யப்படும்போது, ​​நாட்டின் கடன் ஏன் அதிகரிக்கிறது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ரூ.4,80,000 கடனில் இருப்பது ஏன்?" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x