Published : 02 Jul 2025 01:59 PM
Last Updated : 02 Jul 2025 01:59 PM
புதுடெல்லி: 600 ஆண்டுகள் பழமையான தனது அறக்கட்டளை தன்னுடைய மரணத்திற்குப் பிறகும் தொடரும் என்று புத்த மதகுரு தலாய் லாமா முறையாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தலாய் லாமா தனது எக்ஸ் பக்கத்தில் இன்று (ஜூலை 2) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “செப்டம்பர் 24, 2011 அன்று, திபெத்திய ஆன்மிக மரபுகளின் தலைவர்கள் கூட்டத்தில் நான் ஓர் அறிக்கை வெளியிட்டேன். திபெத்துக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள சக திபெத்தியர்கள், திபெத்திய பவுத்தத்தைப் பின்பற்றுபவர்கள், திபெத்தியர்களுடன் தொடர்பு கொண்டவர்களுக்கான அந்த அறிக்கையில், தலாய் லாமாவின் அறக்கட்டளை தொடர வேண்டுமா என்று கேட்டிருந்தேன்.
1969-ஆம் ஆண்டிலேயே, தலாய் லாமாவின் வாரிசுகளை தேர்ந்தெடுக்கும் முறை எதிர்காலத்தில் தொடர வேண்டுமா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் முடிவு செய்ய வேண்டும் என்று நான் தெளிவுபடுத்தினேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தேன். எனக்கு 90 வயதாகும்போது, தலாய் லாமாவின் அறக்கட்டளை தொடர வேண்டுமா இல்லையா என்பதை மறு மதிப்பீடு செய்ய, திபெத்திய புத்த மரபுகளின் உயர் லாமாக்கள், திபெத்திய பொதுமக்கள் மற்றும் திபெத்திய பவுத்தத்தைப் பின்பற்றும் அக்கறையுள்ள மக்களிடம் ஆலோசனை கேட்பேன் என்றும் நான் கூறினேன்.
இது தொடர்பாக பொது விவாதங்களை நான் மேற்கொள்ளவில்லை என்றாலும், கடந்த 14 ஆண்டுகளாக திபெத்தின் ஆன்மிக மரபுகளின் தலைவர்கள், நாடு கடத்தப்பட்ட திபெத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறப்பு பொதுக்குழு கூட்ட பங்கேற்பாளர்கள், மத்திய திபெத்திய நிர்வாக உறுப்பினர்கள், அரசு சாரா நிறுவனங்கள், இமயமலைப் பகுதியைச் சேர்ந்த பவுத்தர்கள், மங்கோலியா, ரஷ்ய கூட்டமைப்பின் பவுத்த குடியரசுகள் மற்றும் சீனா உள்ளிட்ட ஆசியாவில் உள்ள பவுத்தர்கள், தலாய் லாமாவின் அறக்கட்டளை தொடர வேண்டும் என்று உறுதியுடன் கோரி, அதற்கான காரணங்களுடன் எனக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
திபெத்தில் உள்ள திபெத்தியர்களிடம் இருந்தும் இதே வேண்டுகோளை பல்வேறு வழிகள் மூலம் நான் பெற்றுள்ளேன். இந்த அனைத்து கோரிக்கைகளுக்கும் இணங்க, தலாய் லாமாவின் அறக்கட்டளை தொடரும் என்று நான் உறுதிப்படுத்துகிறேன். எதிர்கால தலாய் லாமா அங்கீகரிக்கப்பட வேண்டிய செயல்முறை, செப்டம்பர் 24, 2011 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெளிவாக நிறுவப்பட்டுள்ளது. அவ்வாறு செய்வதற்கான பொறுப்பு, புனித தலாய் லாமாவின் அலுவலகமான காடன் போட்ராங் அறக்கட்டளையின் உறுப்பினர்களிடம் மட்டுமே இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் திபெத்திய பவுத்த மரபுகளின் பல்வேறு தலைவர்களிடமும், தலாய் லாமாக்களின் பாரம்பரியத்துடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்ட நம்பகமான தர்மப் பாதுகாவலர்களிடமும் கலந்தாலோசிக்க வேண்டும். அதன்படி அவர்கள் கடந்த கால மரபுகளின்படி புதிய தலாய் லாமா குறித்த தேடல் மற்றும் அங்கீகார நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.
எதிர்கால தலாய் லாமாவை அங்கீகரிக்க காடன் போட்ராங் அறக்கட்டளைக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்பதை இதன் மூலம் மீண்டும் வலியுறுத்துகிறேன்; இந்த விஷயத்தில் தலையிட வேறு யாருக்கும் அத்தகைய அதிகாரம் இல்லை” என்று தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
திபெத்தில் இருந்து 1959-ஆம் ஆண்டு நாடு கடத்தப்பட்டதை அடுத்து இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் ஆயிரக்கணக்கான புத்த மதத்தைப் பின்பற்றுபவர்களுடன் தலாய் லாமா வசித்து வருகிறார். தலாய் லாமாவின் 89-வது பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT