Published : 29 Jun 2025 01:31 AM
Last Updated : 29 Jun 2025 01:31 AM
புதிய இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு, வாகன உற்பத்தியாளர்கள் இரண்டு ஹெல்மெட்களை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதுபோல ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்கவும் முடிவு செய்துள்ளது.
இந்த புதிய விதிகளை நடைமுறைப்படுத்த மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-ல் திருத்தம் செய்ய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: புதிய திருத்தங்கள் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட 3 மாதங்களில் இந்த விதிகள் நடைமுறைக்கு வரும். வாகன ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவரின் பாதுகாப்பை உறுதிசெய்வதே இதன் நோக்கம்.
இந்த ஹெல்மெட்கள் பிஐஎஸ் (இந்திய தர நிர்ணய அமைப்பு) நிர்ணயித்த தரத்துடன் இருக்க வேண்டும். ஹெல்மெட் விதியுடன் கூடுதலாக, ஜனவரி 1, 2026 முதல் 50சிசி-க்கு மேல் இன்ஜின் திறன் அல்லது மணிக்கு 50 கி.மீ.க்கு மேல் அதிகபட்ச வேகம் கொண்ட மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் உள்ளிட்ட அனைத்து எல்2 வகை இருசக்கர வாகனங்களிலும் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்) பொருத்துவதை கட்டாயமாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இது வாகனத்தின் கட்டுப்பாட்டை மேம்படுத்தி சறுக்குவதை தடுக்கும்.
இந்த புதிய விதிகள் குறித்து பொதுமக்கள் தங்கள் பரிந்துரை மற்றும் ஆட்சேபனைகளை comments-morth@gov.in. என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம். இதற்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT