Published : 28 Jun 2025 04:53 PM
Last Updated : 28 Jun 2025 04:53 PM
பெங்களூரு: கர்நாடகாவில் மலே மகாதேஸ்வரா வனவிலங்கு சரணாலயத்தில் ஒரு புலி மற்றும் அதன் நான்கு குட்டிகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
ஹூக்யம் மலைத் தொடரின் கஜனூர் பகுதியில் உள்ள மீனியன் அருகே சமீபத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்த பசுவுடன், ஒரு பெண் புலி மற்றும் அதன் 4 குட்டிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. பிரேதப் பரிசோதனையில், புலி மற்றும் குட்டிகள் உட்கொண்ட பசுவின் உடலில் பூச்சிக்கொல்லி மருந்து தடவப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, கோப் கிராமத்தை சேர்ந்த கோனப்பாவுக்குச் சொந்தமான பசு வேண்டுமென்றே விஷம் வைக்கப்பட்டு கொல்லப்பட்டதாக சந்தேகம் எழுந்தது. தடயங்களின் அடிப்படையில், வனத்துறை அதிகாரிகள் கோனப்பா மற்றும் உள்ளூர் கால்நடை மேய்ப்பவர்கள் 6 பேரை பிடித்து விசாரித்தனர். அதன்பின்னர் மதராஜ் மற்றும் நாகராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) மற்றும் சிறப்பு புலனாய்வுக் குழுவுடன் இணைந்து வனத்துறை அதிகாரிகள் இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் ஒரு கடுமையான வனவிலங்கு குற்றமாகக் கருதப்படுகிறது. எனவே, குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT