Published : 14 Jun 2025 12:11 AM
Last Updated : 14 Jun 2025 12:11 AM
அகமதாபாத்தில் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் குடும்பத்தினரைச் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்தை நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு செய்தார். அப்போது மீட்புப் பணிகள் குறித்து பிரதமருக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். பின்னர் அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு சென்ற மோடி, அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். பிரதமருடன் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.
இதைத் தொடர்ந்து விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் வீட்டுக்கு பிரதமர் மோடி சென்றார். மீளாத் துயரில் சிக்கியுள்ள ரூபானி குடும்பத்தினரை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது:
மறைந்த முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் குடும்பத்தினரைச் சந்தித்தேன். அவர் நம்மிடையே இல்லை என்பது நினைத்துப் பார்க்க முடியாதது. நான் அவரை பல தசாப்தங்களாக அறிவேன்.
மிகவும் சவாலான சில காலகட்டங்களில் நாங்கள் தோளோடு தோள் சேர்ந்து பணியாற்றினோம். அவர், பணிவானவராகவும், கடின உழைப்பாளியாகவும், கட்சியின் சித்தாந்தத்தில் உறுதியாகவும் இருந்தார். பதவிகளில் உயர்ந்து, அமைப்பில் பல்வேறு பொறுப்புகளை வகித்து, குஜராத்தின் முதல்வராக விடாமுயற்சியுடன் பணியாற்றினார். இவ்வாறு பிரதமர் மோடி அதில் குறிப்பிட்டுள்ளார்.
அதிர்ஷ்ட எண்ணே துரதிர்ஷ்டமாக மாறிய சோகம்: குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானிக்கு அவரது அதிர்ஷ்ட எண்ணே, துரதிர்ஷ்டமாக மாறிய சோகம் நடந்துள்ளது.
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமானத்தில் உயிரிழந்தவர்களில் குஜராத் முன்னாள் முதல்வரும் பாஜகவின் மூத்தத் தலைவரான விஜய் ரூபானியும்(68) ஒருவர். லண்டனில் உள்ள தனது மகளைச் சந்திப்பதற்காக விமானத்தில் சென்று கொண்டிருந்தார். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக ரூபானி விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
விஜய் ரூபானி, 1206 என்ற எண்ணை தனது அதிர்ஷ்ட எண்ணாக பயன்படுத்தி வந்தார். தனது வாகன பதிவெண்களில் கூட அந்த எண்ணையே அவர் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில், ஜூன் 12-ம் நடந்த விபத்தில் அவர் உயிரிழந்தார. அவரது 1206 என்ற அதிர்ஷ்ட எண்ணான 12.06 தேதியில் அவர் இறந்தது அதிர்ஷ்ட எண்ணே துரதிர்ஷ்டமாக மாறியுள்ளது என்று அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர்.
விமானத்தில் அவரது இருக்கை எண் 12. பயணம் செய்த நேரம் பிற்பகல் 12:10 மணி. இது 12 என்ற எண்ணுடனான அவரது நம்பிக்கையை காட்டுவதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
மியான்மரில் 1956, ஆகஸ்ட் 2 ஆம் தேதியில் பிறந்த விஜய் ரூபானி, 1996 முதல் 1997 வரை ராஜ்கோட் மேயராகவும், 2006 முதல் 2012 வரையில் மாநிலங்களவை எம்.பி.யாகவும்ம், 2016-ம் ஆண்டு முதல்- 2021-ம் ஆண்டு வரையில் வரையில் குஜராத் மாநிலத்தின் முதல்வராகவும் பதவி வகித்தார்.
பாஜகவின் மூத்தத் தலைவரான ரூபானி, குஜராத் போக்குவரத்து, தொழிலாளர் மற்றும் நீர்வழங்கல் துறைகளிலும் அமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகாரிகள் தகவல்: இதற்கிடையே, விமான துறை நிபுணர்கள் கூறியதாவது: விபத்துக்கு உள்ளாவதற்கு முன்பே விமானத்தில் இருந்து விஷ்வாஸ் குதித்து விட்டாரா என்பது தெரியவில்லை. ஏனென்றால், விமானத்தின் அவசரகால கதவுக்கு அருகில் உள்ள 11ஏ இருக்கையில்தான் அவர் பயணித்துள்ளார். விபத்துக்குள்ளான விமானம் பறந்த காட்சிகளை பார்க்கும் போது,விமானத்தின் 2 இன்ஜின்களுக்கும் தேவையான உந்துசக்தி கிடைக்கவில்லை என்று தெரிகிறது. கூட்டமாக பறவைகள்மோதி இருந்தாலும் விபத்துக்குள்ளாகி இருக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT