Published : 09 Jun 2025 07:04 AM
Last Updated : 09 Jun 2025 07:04 AM
பெங்களூரு: பெங்களூரு கூட்ட நெரிசலில் ஒரே மகனை இழந்த தந்தை, மகனின் சமாதியில் கண்ணீர் சிந்தி கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) வெற்றி பெற்றது. இதன் வெற்றி விழா கடந்த 4-ம் தேதி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இதில் பூமிக் லட்சுமணனும் (21) ஒருவர். இன்ஜினீயரிங் கல்லூரி இறுதி ஆண்டு மாணவரான அவர், குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்காமல் ஆர்சிபி வெற்றி விழாவில் பங்கேற்று உள்ளார். அவரது உயிரிழப்பு குடும்பத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் மாணவர் பூமிக் லட்சுமணனின் இறுதிச் சடங்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது மகன் பூமிக்கை அடக்கம் செய்த இடத்தில் அவரது தந்தை பி.டி. லட்சுமணன் கண்ணீர் சிந்தி கதறி அழுதார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. "மகனின் சமாதியில் நானும் தங்கி விடுகிறேன். என்னை இங்கேயே விட்டுவிடுங்கள்" என்று அவர் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. அவரை, உறவினர்கள் வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
இதுதொடர்பாக பி.டி.லட்சுமணன் கூறியதாவது:
பெங்களூரு கூட்ட நெரிசலில் எனது ஒரே மகனை இழந்துவிட்டேன். எங்களை பொறுத்தவரை அவன் தங்க மகன். அவனுக்கு திரைப்படம் மீதோ, கிரிக்கெட் மீதோ மோகம் கிடையாது. நண்பர்கள் வற்புறுத்தியதால் அவர்களோடு சேர்ந்து சின்னசாமி ஸ்டேடியத்துக்கு சென்றுள்ளான். இளம் தலைமுறையினர் நண்பர்களின் பேச்சை கேட்டு நடக்கக்கூடாது. பெற்றோரின் சொல்லுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். உடன் சென்ற நண்பர்கள் அனைவரும் உயிர்தப்பி விட்டனர். எனது மகன் மட்டும் உயிரிழந்து உள்ளார்.
ஆர்சிபி-யின் வெற்றி கொண்டாட்டத்துக்கு எனது மகனை பறிகொடுத்து விட்டேன். கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் தங்களது குடும்பத்தினரை பாதுகாப்பாக வெளியேற்றி உள்ளனர். சமானிய பொதுமக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்து உள்ளனர். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் வெற்றி கொண்டாட்டத்துக்கு ஏன் ஏற்பாடு செய்ய வேண்டும். ஒரு தரப்பினர் பணம் சம்பாதிக்க, மக்களின் உயிர்களை பறிப்பது ஏன்?
கர்நாடக அரசு தரப்பிலோ, ஆர்சிபி அணி தரப்பிலோ எனது குடும்பத்தினரை யாரும் சந்திக்கவில்லை. அவர்களது தவறுகளால் எனது ஒரே மகனை இழந்து தவிக்கிறேன். மகனின் எதிர்காலத்துக்காக நிலத்தை வாங்கி வைத்திருந்தேன். அந்த இடத்திலேயே அவனை இப்போது அடக்கம் செய்திருக்கிறேன். என்னைப் போன்ற நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது.
எனது மகனை சிறுவயது முதலே ஒழுக்கம், கட்டுப்பாட்டுடன் வளர்த்தேன். ஆனால் கல்லூரியில் சேர்ந்த பிறகு அவன், நண்பர்களின் ஆலோசனைகளுக்கு முன்னுரிமை அளித்தான். அதுவே அவனது உயிரை பறித்துவிட்டது. இளைய தலைமுறையினர் அவர்களின் பெற்றோரின் ஆலோசனைப்படி நடக்க வேண்டுகிறேன். இவ்வாறு பி.டி.லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
நிவாரண தொகை உயர்வு: பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார். இந்த சூழலில் அவர் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT