Published : 08 Jun 2025 04:41 PM
Last Updated : 08 Jun 2025 04:41 PM
ஹைதராபாத்: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடு, இதில் முதல் ஆண்டை ஜூன் 12ம் தேதி நிறைவு செய்கிறார். மக்களவை தொகுதி மறுவரையறையை மேலும் 25 ஆண்டுகளுக்கு கடந்த 2001 ஆம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் ஒத்திவைத்தபோது, அதற்கான அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வதில் முக்கிய பங்கு வகித்தவர் சந்திரபாபு நாயுடு. அப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் இருந்தது.
இந்நிலையில், தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக தி இந்து நாளிதழுக்கு பேட்டி அளித்த சந்திரபாபு நாயுடு, “பிரதமரின் புத்தி கூர்மை மீது எனக்கு 100% நம்பிக்கை உள்ளது. அவர் அனைவருடனும் இணைந்து பணியாற்றுவார். அதன் பிறகே [தொகுதி மறுவரையறையை] முன்னெடுப்பார்.
2001ம் ஆண்டு தொகுதி மறுவரையறை மேலும் 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. தென் மாநிலங்களின் உணர்வின் காரணமாக அது செய்யப்பட்டது. அந்த நேரத்தில், தென்னிந்தியாவில் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த முடிந்தது என்று நாங்கள் நினைத்தோம். அது நல்ல விஷயம். இப்போது வட இந்தியா, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும்.
இன்று, மக்கள்தொகை என்பது ஒரு சொத்து என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். எனவே வட இந்தியாவில் அதிக மக்கள் தொகை உள்ளது. அவர்கள் ஒரு நல்ல வேலையைச் செய்துள்ளனர். நாம் நமது உணர்வை அப்படியே வைத்திருக்க வேண்டும். தொகுதி மறுவரையறை நிர்ணயம் குறித்து மத்திய அரசு தனது கொள்கையை வெளியிடும்.
இந்த விஷயத்தில் தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, வாஜ்பாய் அரசாங்கத்தைப் போலவே உணர்திறன் மிக்கதாக உள்ளது. வேறு எதையும்விட நாட்டின் நலனே முக்கியம் என்பதில் பிரதமர் மிகத் தெளிவாக இருக்கிறார்.
நிதி ஆயோக் கூட்டங்களில் மக்கள்தொகை மாற்றங்கள் குறித்து பரவலாக விவாதித்தோம். ஆனால் இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடியுடன் பேச இன்னும் நேரம் வரவில்லை. பொருத்தமான நேரத்தில் நான் பேசுவேன்.
தொகுதி மறுவரையறை நிர்ணயம் என்ற கோரிக்கையை தென் மாநிலங்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளன. ஆனால், பிரச்சினை இன்னும் வரவில்லை. இவ்விஷயத்தில் கோரிக்கை மிகவும் முன்கூட்டியே முன்வைக்கப்படுகிறது. சரியான நேரத்தில் அது விவாதிக்கப்பட வேண்டும். மத்திய அரசு ஒரு கொள்கையுடன் வரும்போது, தென்னிந்தியாவிற்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால், நாம் பேசலாம். எதுவும் இல்லாமல், நீங்கள் அதை எழுப்பினால், அது வெறும் அரசியல் முழக்கம் மட்டுமே.
தென்னிந்தியாவில் மக்கள்தொகை குறைந்து வருகிறது. வயதான மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இப்போது, மக்கள்தொகை வளர்ச்சியை நாம் பெரிய அளவில் ஊக்குவிக்க வேண்டும். அதிக குழந்தைகளைப் பெறுவதற்கு ஏதேனும் ஊக்கத்தொகை வழங்கப்படுமா என கேட்கிறீர்கள். உலகின் எந்தப் பகுதியிலும் இதுபோன்ற அறிவிப்புகள் வெற்றிபெறவில்லை. மக்கள், இப்போது குழந்தைகளைப் பெறுவதில்லை. எனவே நாம் அதற்கு நேர்மாறாகச் செல்ல வேண்டும். மக்கள் தொகை மேலாண்மை பற்றி நாம் சிந்திக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT