Published : 06 Jun 2025 06:58 PM
Last Updated : 06 Jun 2025 06:58 PM
புதுடெல்லி: வக்பு சொத்துகளை பதிவு செய்யவும், சரிபார்க்கவும், கண்காணிக்கவுமான பணிகளுக்காக மத்திய அரசு சார்பில் உமீத் (UMEED) என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ இதனை தொடங்கிவைத்தார்.
இந்தியாவின் வக்பு சொத்து நிர்வாக வரலாற்றில் இது ஒரு புதிய அத்தியாயமாகப் பார்க்கப்படுகிறது. இது வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதோடு, சாமானிய முஸ்லீம்களுக்கு குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவியாக இருக்கும் என்று மத்திய சிறுபான்மையினர் நலன் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
‘UMEED’ போர்ட்டலை இன்று தொடங்கிவைத்த அவர், இந்தப் போர்ட்டல் தொழில்நுட்ப மேன்மைப்படுத்தலைவிட கூடுதல் சிறப்பு உடையது என்று கூறினார். சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கான அரசின் உறுதிப்பாட்டுக்கு இது ஓர் அடையாளம் என்று குறிப்பிட்ட கிரண் ரிஜிஜூ, அந்த சமூகத்துக்கு சொந்தமான வக்பு சொத்துகள் ஏழை முஸ்லீம்களுக்கு பயனுள்ள வகையிலும், நியாயமாகவும் பயன்படுத்தப்படுவதை இது உறுதி செய்யும் என்றார்.
மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் தளமான இது, வக்பு சொத்துக்களின் நிகழ்நேர பதிவேற்றம், சரிபார்ப்பு, கண்காணிப்புக்காக மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்தத் துறையின் இணையமைச்சர் ஜார்ஜ் குரியன், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்தமான இந்த இணைய போர்ட்டல், வக்பு சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் என்றும் வக்பு நிர்வாகத்தை மக்களுக்கு மிக நெருக்கமாக கொண்டு வரும் என்றும் தெரிவித்தார்.
மாநிலங்கள், மத்திய சிறுபான்மை அமைச்சகத்துடன் பகிர்ந்துள்ள புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் 8.7 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துகள் வக்பு சொத்துகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. 4.2 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துகள் முறையான ஆவணங்கள் இன்றி வக்பு சொத்துகளாக நீண்டாக காலமாக இருந்துவருகின்றன. வக்பு சொத்துகள் நாடு முழுவதும் 39 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விரவிக்கிடக்கின்றன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT