Published : 06 Jun 2025 02:43 PM
Last Updated : 06 Jun 2025 02:43 PM
பாட்னா: “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் வார்த்தைகள், பாகிஸ்தானின் வார்த்தைகளை ஒத்திருக்கிறது. அவர் தேசத்தை மதிக்கவில்லை” மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கிரிராஜ் சிங், "ராகுல் காந்தி இந்தியாவின் வீரத்தை எதிர்த்தார். அவர் ராணுவத்தின் துணிச்சல் குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், உலகளவில் இந்திய ராணுவத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தார். பிஹார் பொதுமக்கள் அவரை எதிர்ப்பார்கள், ராணுவத்தையோ அல்லது தேசத்தையோ மதிக்காத ஒருவருக்கு அவர்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்? ராகுல் காந்தியின் நாக்கு, பாகிஸ்தான் போன்றது. அவர் தேசத்தை மதிக்கவில்லை.
இப்போது பிரதமர் மோடி அவமதிக்கப்படவில்லை. 1971-ல் ராணுவம் வென்றதா அல்லது இந்திரா காந்தி ஜெயித்தாரா? ஜெயித்தது ராணுவம்தான். அப்போது வாஜ்பாய் எதிர்க்கட்சியில் இருந்தார். அவர், “இப்போது பாரதம் மட்டுமே இருக்கிறது, வேறு எந்த கட்சியும் இல்லை” என்றார். இந்த பயனற்ற நபர் (ராகுல் காந்தி) நாட்டின் துணிச்சலையும் ராணுவத்தையும் கேலி செய்கிறார். அப்படிப்பட்ட ஒருவரை புறக்கணிக்க வேண்டும்" என்று கூறினார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று பிஹாரில் உள்ள கயா விமான நிலையத்துக்கு வந்தார். அவர் காங்கிரஸின் 'அரசியலமைப்பு மாநாட்டில்' உரையாற்றவும், இன்னும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே, ராகுல் காந்தி தர்பங்காவுக்குச் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். சாதி கணக்கெடுப்பு மற்றும் இடஒதுக்கீடு போன்ற பிரச்சினைகள் குறித்து விவாதித்தார். மாணவர்களிடம் சமூக நீதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், அரசின் கொள்கைகளையும் விமர்சித்தார். சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியத்தை எடுத்துக்காட்டி, பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களின் அழுத்தம் காரணமாக அதை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT