Published : 06 Jun 2025 02:32 PM
Last Updated : 06 Jun 2025 02:32 PM
வாஷிங்டன்: அமெரிக்காவில் அனைத்துக் கட்சிக் குழுவை வழிநடத்தும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூரிடம், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்பு குறித்து அவரது மகன் இஷான் தரூர் கேள்வி எழுப்பினார். அதற்கான மூன்று காரணங்களை அடுக்கி சசி தரூர் விளக்கமளித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்புக்கான ஆதாரங்களை தங்கள் குழுவிடம் எந்த நாடும் கேட்டதா என்று இஷான் தரூர், சசி தரூரிடம் கேள்வி எழுப்பினார். அதேபோல இந்த தாக்குதலில் தனக்கு தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் தொடர்ந்து மறுப்பது குறித்தும் அவர் வினா எழுப்பினார்.
தனது மகனின் கேள்விக்கு பதிலளித்த சசி தரூர், “நீங்கள் இதை எழுப்பியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எந்த நாடும் அத்தகைய ஆதாரத்தைக் கேட்கவில்லை. மிக எளிமையாகச் சொன்னால், யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஊடகங்கள் இரண்டு அல்லது மூன்று இடங்களில் இதுபற்றி கேட்டுள்ளன. உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் இந்தியா இதைச் செய்திருக்காது என்பதை மிகத் தெளிவாகக் கூற விரும்புகிறேன்.” என்று கூறினார்.
இதனையடுத்து சசி தரூர் மூன்று ஆதாரங்களை அடுக்கினார். அதன்படி, “உங்கள் அனைவரின் கவனத்துக்கும் கொண்டுவர மூன்று குறிப்பிட்ட காரணங்கள் உள்ளன. முதலாவது, பாகிஸ்தானில் இருந்து 37 ஆண்டுகளாக தொடர்ச்சியான பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்து வருகின்றன, அதோடு தொடர்ச்சியான மறுப்புகளும் உள்ளன. அதாவது, ஒரு கண்டோன்மென்ட் நகரத்தில் உள்ள ஒரு ராணுவ முகாமுக்கு அடுத்துள்ள ஒரு பாகிஸ்தான் பாதுகாப்பு இல்லத்தில் ஒசாமா பின்லேடன் கண்டுபிடிக்கப்படும் வரை, அவர் எங்கே இருக்கிறார் என்று பாகிஸ்தானுக்குத் தெரியாது என சொன்னதை அமெரிக்கர்கள் மறந்துவிடவில்லை. இதுதான் பாகிஸ்தான்.
மும்பை தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர்கள் மறுத்தனர். பயங்கரவாதிகளில் ஒருவர் உயிருடன் பிடிபட்டார். அவரது பெயர், அடையாளம் மற்றும் முகவரி பாகிஸ்தானில் உள்ளன. விசாரணையின் போது அனைத்தும் தெரியவந்தது. அவர் எங்கு பயிற்சி பெற்றார், என்ன செய்தார் என்று எங்களிடம் கூறினார். மும்பை கொலையாளிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து நிமிடத்திற்கு நிமிடம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. இது இந்திய மற்றும் அமெரிக்க உளவுத்துறையால் பதிவு செய்யப்பட்டது.
பாகிஸ்தானின் நோக்கம் என்னவென்று எங்களுக்குத் தெரியும். அவர்கள் பயங்கரவாதிகளை அனுப்புவார்கள். அவர்கள் உண்மையில் பிடிபடும் வரை தாங்கள் அவ்வாறு செய்யவில்லை என்று மறுப்பார்கள். அதுதான் முதல் காரணம்.
இரண்டாவது காரணம். பஹல்காம் தாக்குதலுக்கு ‘எதிர்ப்பு முன்னணி’ (ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்) பொறுப்பேற்றது. “இது லஷ்கர்-இ-தொய்பாவின் நன்கு அறியப்பட்ட பினாமி முன்னணி" என்று அவர் அழைத்த எதிர்ப்பு முன்னணி (TRF), ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்த "45 நிமிடங்களுக்குள்" பொறுப்பேற்றது. எதிர்ப்பு முன்னணி என்பது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறையால் பட்டியலிடப்பட்ட ஒரு தடைசெய்யப்பட்ட அமைப்பு. இது பாகிஸ்தானில் உள்ள முரிட்கே நகரில் பாதுகாப்பான புகலிடத்தில் இருந்தது. எதிர்ப்பு முன்னணி மற்றும் அதன் நடவடிக்கைகள் குறித்த ஆதாரங்களை இந்தியா ஏற்கனவே டிசம்பர் 2023 மற்றும் 2024 இல் ஐ.நா. பயங்கரவாதக் குழுவிடம் சமர்ப்பித்தது.
மூன்றாவது விஷயமாக, மே 7 அன்று பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரைத் நடத்தியது. துல்லிய தாக்குதல்கள் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் உள்ள ஒன்பது பயங்கரவாதத் தளங்கள் தாக்கப்பட்டன. பயங்கரவாத முகாம்களில் முதல் தாக்குதல்கள் நடந்தபோது, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட முக்கிய அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. பயங்கரவாதிகளின் உறவினர்களால் நடத்தப்படும் இறுதிச் சடங்குகளில் பாகிஸ்தான் ஜெனரல்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சீருடையில் கலந்துகொள்வதைக் காட்டும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. எனவே இந்தியாவைப் பொறுத்தவரை மூன்று உறுதியான ஆதாரங்களை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்" என்று அவர் கூறினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT