Last Updated : 06 Jun, 2025 10:48 AM

 

Published : 06 Jun 2025 10:48 AM
Last Updated : 06 Jun 2025 10:48 AM

ஆர்சிபி அணி நிர்வாகி உட்பட 4 பேர் கைது: பெங்களூரு நெரிசல் உயிரிழப்பில் காவல் துறை நடவடிக்கை

பெங்களூரு: கடந்த புதன்கிழமை அன்று ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றி விழா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் அந்த அணியின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் நிகில் சோசாலே உட்பட நான்கு பேரை கார்நாடக மாநில காவல்துறை கைது செய்துள்ளது.

பெங்களூருவில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மார்க்கெட்டிங் மற்றும் வருவாய் பிரிவு தலைவர் நிகில் சோசாலே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பெங்களூருவில் இருந்து மும்பை செல்ல இருந்த நிலையில் பெங்களூரு விமான நிலையத்தில் அவரை போலீஸார் கைது செய்தனர்.

இதோடு வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்த டிஎன்ஏ நிறுவனத்தின் ஊழியர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல். இந்த நிறுவனம் தான் ஆர்சிபி அணியின் வெற்றி விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டவர்கள் கப்பன் பார்க் காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் ஆர்சிபி அணி, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் டிஎன்ஏ நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இதில் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளரை இன்னும் போலீஸார் கைது செய்யவில்லை. அவர்கள் இருவரும் தலைமறைவாக இருப்பதாக தகவல்.

கூட்ட நெரிசல் வழக்கை விசாரிக்க‌ உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை அன்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு மாநகர காவல் ஆணையர் பி.தயானந்தா, கூடுதல் ஆணையர் விகாஷ் குமார், மத்திய மண்டல துணை ஆணையர் சேகர்.எச், உதவி ஆணையர் பாலகிருஷ்ணா ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நடப்பு ஐபிஎல் சீசனில் ஆர்​சிபி அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணிக்கு புதன்கிழமை அன்று விதான சவுதா வளாகத்​தி​லும், சின்​ன​சாமி கிரிக்​கெட் மைதானத்​தி​லும் வெற்றி விழா நடை​பெற்​றது. சின்​ன​சாமி மைதானத்​தில் ஏற்​பட்ட கூட்ட நெரிசலில் தமிழகத்தின் உடுமலைப்பேட்டையை சேர்ந்த இளம்பெண் காமாட்சி உட்பட 11 ரசிகர்கள் உயி​ரிழந்​தனர். பலர் காயமடைந்தனர். இந்த சம்​பவம் பெரும் சோகத்தை ஏற்​படுத்​தி​யது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x