Published : 06 Jun 2025 06:44 AM
Last Updated : 06 Jun 2025 06:44 AM
ஜம்மு: செனாப் ரயில் பாலத்தை தொடங்கி வைக்கவும், காஷ்மீரின் கத்ரா பகுதியில் ரூ.46,000 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டங்களை அர்ப்பணிக்கவும் பிரதமர் மோடி இன்று ஜம்மு காஷ்மீர் செல்கிறார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப்பின் பிரதமர் மோடி முதல் முறையாக ஜம்மு காஷ்மீர் செல்வதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்த்தில் செனாப் ஆற்றின் குறுக்கே 1,315 நீளத்துக்கு பிரம்மாண்ட ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. செனாப் ஆற்றில் இருந்து 359 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம் என்பது குறிப்பிடத்தக்கது. நில அதிர்வு மற்றும் பலத்த காற்று ஆகியவற்றை தாங்கும் வகையில் இந்தப் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்பாலம் வழியாக இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் மூலம், கத்ராவிற்கும் ஸ்ரீநகருக்கும் இடையே பயணிக்க சுமார் 3 மணிநேரம் மட்டுமே ஆகும். இதனால் தற்போதுள்ள பயண நேரம் 2 முதல் 3 மணி நேரம் வரை குறையும். இந்தப் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் போக்குவரத்து (யுஎஸ்பிஆர்எல்) திட்டத்தையும் பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். 272 கி.மீ தொலைவிலான இத்திட்டப் பணிகள் சுமார் ரூ.43,780 கோடி செலவில் நிறைவு செய்யப்பட்டுள்ளது. 119 கி.மீ தொலைவு கொண்ட இந்தத் திட்டத்தில் 36 சுரங்கப்பாதைகள் மற்றும் 943 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
செனாப் நதியின் கிளை நதியான ஆஞ்சி ஆற்றின் குறுக்கே, நாட்டின் முதல் கேபிள் ரயில் பாலம் 473 மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். அனைத்து கால நிலையிலும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள யுஎஸ்பிஆர்எல் திட்டம் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இடையே தடையற்ற ரயில் போக்குவரத்தை ஏற்படுத்தும்.
ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கோயில் உள்ள கத்ரா பகுதியில் இருந்து ஸ்ரீநகர் வரை இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். கத்ராவில் ரூ.46,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மேலும், பல்வேறு சாலைத் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
தேசிய நெடுஞ்சாலை-701-ல் ரஃபியாபாத் முதல் குப்வாரா வரையிலான சாலை விரிவாக்கத் திட்டத்திற்கும், தேசிய நெடுஞ்சாலை - 444-ல் ரூ.1,952 கோடிக்கும் அதிக மதிப்புடைய ஷோபியன் புறவழிச்சாலை கட்டுமானத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
ஸ்ரீநகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சங்கராமா சந்திப்பிலும், தேசிய நெடுஞ்சாலை-44-ல் உள்ள பெமினா சந்திப்பிலும் இரண்டு மேம்பாலத் திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார். கத்ராவில் ரூ.350 கோடிக்கும் அதிக மதிப்பில் உருவாக்கப்படும் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி உயர் சிகிச்சை மருத்துவ மையத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப்பின்பு, பிரதமர் மோடி முதல் முறையாக காஷ்மீர் வருவதால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் மோடி நிகழ்ச்சி நடைபெறும் கத்ரா அரங்கத்தை சுற்றிலும் கண்காணிப்பு பணியில் ட்ரோன்கள் ஈடுபடுத்தப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT