Published : 06 Jun 2025 05:56 AM
Last Updated : 06 Jun 2025 05:56 AM
பெங்களூரு: ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் பெங்களூருவில் நடந்த விழாவில் தமிழக பெண் உட்பட 11 ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளாமல் அவசர கதியில் விழாவை நடத்தியது ஏன் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக கர்நாடக அரசு, பெங்களூரு காவல் ஆணையர், ஆட்சியர், ஐபிஎல், பிசிசிஐ நிர்வாகிகள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதி போட்டியில் வென்ற ஆர்சிபி (ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு) அணிக்கு பெங்களூருவில் நேற்று முன்தினம் விதானசவுதா வளாகத்திலும், சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்திலும் வெற்றி விழா நடைபெற்றது. சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தமிழகத்தின் உடுமலைப்பேட்டையை சேர்ந்த இளம்பெண் காமாட்சி உட்பட 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்தது. தலைமை நீதிபதி காமேஷ்வர் ராவ், நீதிபதி சி.எம்.ஜோஷி அமர்வில் விசாரணை நடைபெற்றது. அதன் விவரம்:
தலைமை நீதிபதி: இந்த நெரிசல் உயிரிழப்பை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. தண்டனைக்குரிய அலட்சியமாகவே கருத வேண்டி உள்ளது. ஆர்சிபி அணியின் வெற்றியை அடுத்த நாளே கொண்டாட வேண்டிய அவசியம் என்ன? எதற்காக பேரணி, வெற்றி விழா என இரண்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன? இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் யார்?
கர்நாடக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி: வெளிநாட்டு வீரர்கள் தாய்நாடு திரும்ப வேண்டி இருந்தது. அதனால், விரைவாக வெற்றி விழா நடத்த வேண்டும் என ஆர்சிபி அணி தரப்பில் கூறப்பட்டது. நெரிசல் ஏற்படும் என கணித்தே, திறந்தவெளி வாகன ஊர்வலத்துக்கு அரசு அனுமதி மறுத்தது. சின்னசாமி ஸ்டேடியத்தில் 35 ஆயிரம் பேர் மட்டுமே உட்கார முடியும். ஆனால் சுமார் 2.50 லட்சம் ரசிகர்கள் குவிந்து விட்டனர். அளவுக்கு அதிகமான கூட்டம் கூடியதால் இந்த துயர சம்பவம் நடந்துவிட்டது.
மூத்த வழக்கறிஞர் அருண் ஷ்யாம்: கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 21 நுழைவு வாயில்கள் உள்ளன. ஆனால், 6, 7, 8-ம் எண் நுழைவு வாயில்கள் மட்டுமே பொதுமக்களுக்காக திறக்கப்பட்டிருந்தன. அதனால், அவற்றின் அருகே அதிக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போதிய போலீஸாரும், ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் இந்த உயிரிழப்புகளை தடுத்திருக்க முடியும்.
நீதிபதி: போதிய போலீஸாரை ஏன் பாதுகாப்பு பணியில் அமர்த்தவில்லை? ஆம்புலன்ஸ், முதலுதவி குழுக்கள் போன்றவற்றை ஏன் ஏற்பாடு செய்யவில்லை? இந்த உயிரிழப்புகளை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏன் எடுக்கவில்லை?
அரசு வழக்கறிஞர்: ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கூட்டம் அதிகமாக வந்ததால் அவை போதுமானதாக இல்லை. அதேபோல, பாதுகாப்பு பணியில் சுமார் 5 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இவ்வாறு வாதம் நடந்தது.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக அரசு, பெங்களூரு காவல் ஆணையர், ஆட்சியர், ஐபிஎல், பிசிசிஐ, கர்நாடக கிரிக்கெட் நிர்வாகிகள் ஜூன் 10-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.
மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்: இதற்கிடையே, கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தது குறித்து கர்நாடக அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ஆர்சிபி நிர்வாகம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த டிஎன்ஏ நிறுவனம் ஆகியவற்றுக்கு பெங்களூரு மாவட்ட ஆட்சியர் ஜெகதீஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கூட்ட நெரிசலில் உயிரிழந்த 11 பேரும் தனித்தனியாக இயற்கைக்கு மாறான வகையில் மரணம் அடைந்ததாக கப்பன் பூங்கா போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கு பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரும், வழக்கறிஞர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, கப்பன் பூங்கா காவல் ஆய்வாளர் கிரீஷ் அளித்த புகாரின்பேரில், ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்த ஆர்சிபி நிர்வாகம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த டிஎன்ஏ நிறுவனம் ஆகியவற்றின் மீது பிரிவு 105 (கொலைக்கு காரணமாக இருத்தல்), 190 (சட்ட விரோத கூடுதலுக்கு பொறுப்பேற்பது), 125 (அலட்சியமாக செயல்பட்டு உயிருக்கு ஆபத்தை விளைவித்தல்) உட்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குன்ஹா தலைமையில் விசாரணை ஆணையம்: கூட்ட நெரிசல் வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பெங்களூரு மாநகர காவல் ஆணையர் பி.தயானந்தா, கூடுதல் ஆணையர் விகாஷ் குமார், மத்திய மண்டல துணை ஆணையர் சேகர்.எச், உதவி ஆணையர் பாலகிருஷ்ணா ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT