Published : 05 Jun 2025 06:22 PM
Last Updated : 05 Jun 2025 06:22 PM
குவஹாத்தி: அசாமில் வெள்ள பாதிப்பு தொடர்ந்து மோசமாக இருந்து வருவதாகவும், 21 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 7 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய ஆறுகளின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ள பாதிப்பு தொடர்பாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஹைலகண்டி, திப்ருகார், மோரிகான், ஹோஜாய், கம்ரூப், நாகோன், கோலாகாட், பிவநாத், கச்சார், ஸ்ரீபூமி, சோனித்பூர், லக்கிம்பூர், தர்ராங், பார்பேட்டா, கோல்பாரா, தெற்கு சல்மாரா, கர்பி அங்லாங் மேற்கு, திமா ஹசாவ், சிவசாகர், கம்ரூப் (மெட்ரோ) மற்றும் தேமாஜி ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதில், 2,59,601 மக்கள் தொகை கொண்ட ஸ்ரீபூமி மாவட்டம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தைத் தொடர்ந்து 1,72,439 பேர் வாழும் ஹைலகண்டி மாவட்டமும், 1,02,716 மக்கள் வாழும் நாகோன் மாவட்டமும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. 14977.99 ஹெக்டேர் பரப்பளவிலான விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சுமார் 5,15,737 கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளம் 66 வருவாய் வட்டங்களில் 1,494 கிராமங்களை பாதித்துள்ளது. இதில் அதிகபட்சம் ஸ்ரீபூமியில் 339 கிராமங்களும், நாகோன்னில் 189, கச்சார் 166 மற்றும் ஹைலகண்டி மாவட்டங்களில் 156 கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்காக 405 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. அவற்றில் 41,317 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவை மட்டுமின்றி, 1,12,324 நிவாரண விநியோக மையங்களும் திறக்கப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகள், பாலங்கள், கல்வி நிறுவனங்கள், அங்கன்வாடி மையங்கள், மின் கம்பங்கள் உள்பட பல்வேறு உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக பதிவாகியுள்ளது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளதாகவும், பிரம்மபுத்திரா உள்ளிட்ட 9 முக்கிய ஆறுகள், மூன்று இடங்களில் அபாய அளவைத் தாண்டி பாய்ந்து கொண்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கச்சார் மாவட்டத்தில் பராக் நதி அபாய அளவைத் தாண்டி பாய்ந்து கொண்டிருக்கிறது என்றும், அதன் துணை ஆறுகளின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும், சில ஆறுகள் அபாய அளவுக்கு மேல் பாய்ந்து கொண்டிருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தெற்கு அசாமின் பல்வேறு பகுதிகளில் ரயில் பாதைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே (NFR) செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். தண்டவாளத்தை ஆக்கிரமித்துள்ள நீரை வெளியேற்ற ரயில்வே ஊழியர்கள் 24 மணி நேரமும் உழைத்து வருவதாக அவர் கூறியுள்ளார். குறுகிய தூர பயணிகள் ரயில்களில் சில ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நீண்ட தூர ரயில்கள் இயக்கப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், வடக்கு குவஹாத்தியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச் சென்று சந்தித்த முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, "முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைப்பதை உறுதி செய்துள்ளோம். வரும் நாட்களில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளத்தின் தீவிரத்தைத் தணிக்க வடிகால் அமைப்பை மேம்படுத்த நாங்கள் பாடுபடுவோம்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT