Published : 05 Jun 2025 08:00 AM
Last Updated : 05 Jun 2025 08:00 AM
புதுடெல்லி: நாடு முழுவதும் 2026 அக்டோபர் 1, 2027 மார்ச் 1 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி தொடங்கும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதற்கு அடுத்தபடியாக 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பணிகள் 2020 ஏப்ரல் மாதத்தில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், கரோனா பெருந்தொற்று பரவியதையடுத்து, இப்பணி தள்ளி வைக்கப்பட்டது. அதன் பிறகு மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால் மீண்டும் தள்ளிப்போனது.
இதனிடையே, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இந்த சூழ்நிலையில், அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை (சிசிபிஏ) கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி நடைபெற்றது.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருப்பதாக தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில், மத்திய உள் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் சாதிவாரி தகவலுடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பை 2 கட்டங்களாக தொடங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மலைப்பாங்கான மற்றும் பனிப்பொழிவு அதிகம் உள்ள லடாக், ஜம்மு காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்கள் மற்றும் உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 2026-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும். மற்ற மாநிலங்களில் 2027-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி இப்பணிகள் தொடங்கும்.
இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் 16-ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது கடந்த 1931-ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 94 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT