Last Updated : 05 Jun, 2025 07:20 AM

1  

Published : 05 Jun 2025 07:20 AM
Last Updated : 05 Jun 2025 07:20 AM

கர்நாடகா கனரா வங்கியில் ரூ.53 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள விஜயாபுரா அருகே கனரா வங்கியில் ரூ.53 கோடி மதிப்பிலான 59 கிலோ தங்க நகைகள், ரூ.7 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விஜயாபுரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லட்சுமன் நிம்பர்கி செய்தியாளர்களிடம் கூறியதாவது: விஜயாபுரா மாவட்டத்தில் உள்ள மனகுலியில் இயங்கிவந்த கனரா வங்கியில் கடந்த மே 25-ம் தேதி இரவு கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். வங்கியின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், நகைகளை கொள்ளையடிப்பதற்கு முன்பாக மாந்திரீக பூஜை செய்துள்ளனர். பின்னர் லாக்கர்கள் இருக்கும் பகுதிக்கு சென்று தங்க நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கரை மட்டும் கள்ள சாவி கொண்டு திறந்துள்ளனர்.

அதில் இருந்த 59 கிலோ எடையுள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர். மேலும், வங்கியில் இருந்த ரூ.7 லட்சம் ரொக்கப் பணத்தையும் திருடி சென்றுள்ளனர்.

கொள்ளையர்களை கண்டுபிடிக்கக்கூடாது என்பதற்காக வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்ததுடன், பதிவான காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்கையும் திருடி சென்றுள்ளனர். அலாரம் சிஸ்டத்தையும் திட்டமிட்டு முன்கூட்டியே அணைத்துள்ளனர்.

வங்கி ஊழியர் அளித்த புகாரின்பேரில் மனகுலி போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற‌னர். கொள்ளையர்களை விரைந்து பிடிக்க 8 தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. வங்கியின் ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள், சந்தேகத்துக்கிடமான நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

வங்கியை 2 நாட்கள் கண்காணித்த பிறகு கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. வங்கியின் உள்அமைப்பு குறித்து முன்பே கண்டறிந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x