Last Updated : 05 Jun, 2025 12:37 AM

6  

Published : 05 Jun 2025 12:37 AM
Last Updated : 05 Jun 2025 12:37 AM

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் பெருந்துயரம்: பெங்களூரு நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழப்பு - முழு விவரம்

பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே நேற்று மாலை திரண்டிருந்த ஏராளமான ரசிகர்கள்.

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) வெற்றி பெற்றதைக் கொண்டாடுவதற்காக பெங்களூருவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. கடந்த 18 ஆண்டுகளில் முதன்முறையாக ஆர்சிபி அணி வெற்றி பெற்றதால் அந்த அணியின் ரசிகர்கள் கர்நாடகா முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். பெங்களூருவில் பட்டாசுகளை வெடித்தும், மேள தாளங்களை முழங்கியும் ஊர்வலமாகச் சென்றனர். எம்.ஜி.சாலை, சிவாஜி நகர், கம்மனஹள்ளி, கோரமங்களா உள்ளிட்ட இடங்களில் வாகனங்களை மறித்து சாலையில் ஆட்டம் போட்ட ரசிகர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.பெலகாவியில் நடனமாடிய‌ மஞ்சுநாத் கும்பார் (28) என்ற ரசிகர் மாரடைப்பால் உயிரிழந்தார். ஷிமோகாவில் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாகச் சென்ற அபினந்தன் (21) என்ற ரசிகர் கீழே தவறி விழுந்து உயிரிழந்தார்.

ஆயிரக்கணக்கில் குவிந்த ரசிகர்கள்: ஐபிஎல் கோப்பையை வென்று நேற்று பெங்களூரு திரும்பிய ஆர்சிபி அணியினரை விமான நிலையத்துக்குச் சென்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் வரவேற்றார். பின்னர், ஆர்சிபி வீரர்கள் கர்நாடகாவின் தலைமைச் செயலகமான விதான சவுதாவுக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு திறந்த வெளியில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் குவிந்தனர். இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் அம்பேத்கர் சாலை, கப்பன் சாலை, குயின்ஸ் சாலை, எம்.ஜி. சாலைகள் ஸ்தம்பித்தன. நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்பட்டது. கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் சின்னசாமி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெண்களும், குழந்தைகளும் தவறி கீழே விழுந்தனர். நெரிசலைக் கட்டுப்படுத்த போலீஸார் லேசான தடியடி நடத்தியதால், கூட்டத்தில் இருந்தவர்கள் சிதறி ஓடினர்.

பெங்களூருவில் உள்ள விதான சவுதா மாளிகை அருகே நேற்று கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள்.

இதனிடையே கிரிக்கெட் மைதானத்தின் 6, 7-வது கேட் பகுதியில் இலவச பாஸ் பெற்ற ரசிகர்கள் மைதானத்துக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஏராளமானோர் ஒரே நேரத்தில் முண்டியடித்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் 10-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். சுய நினைவிழந்த நிலையில் கிடந்தவர்களை தன்னார்வலர்களும், போலீஸாரும் தூக்கிச் சென்றனர்.

சுயநினைவு இழந்து கிடந்தவர்களை சிவாஜி நகரில் உள்ள பவுரிங் மருத்துவமனைக்கும், விட்டல் மல்லையா சாலையில் உள்ள வைதேகி மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு, மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்ததாக தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டு வரப்பட்ட நோயாளிகளை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.நெரிசலில் சிக்கி காயமடைந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு பவுரிங் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று மாலை 7 மணி நிலவரப்படி பவுரிங் மருத்துவமனையில் 7 பேர், வைதேகி மருத்துவமனையில் 4 பேர் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். இவர்களில் ஒரு குழந்தை, ஒரு பெண் அடங்குவர். மற்றவர்கள் 30-க்கும் வயதுக்கும் குறைவான ஆண்கள். இந்த இரு மருத்துவமனைகளிலும் 37 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை நேரில் கண்ட ஆர்சிபி அணி ரசிகர் நவீன் கூறும்போது, ``கிரிக்கெட் வீரர்களை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் எல்லா பக்கங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். கொண்டாட்ட மன நிலையில், சப்தம் போட்டுக்கொண்டு எல்லோரும் கும்பலாக ஓடினர். அதனால் கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறியும், கீழே விழுந்தவர்களை யாரும் தூக்காமல், மிதித்துக் கொண்டே ஓடியதாலும் நிறைய பேர் காயமடைந்த‌னர். சிலர் இறந்து விட்டனர். இதைக் கண்ட அதிர்ச்சியில் இருந்து என்னால் இன்னும் மீள முடியவில்லை''என்றார்.

கூட்ட நெரிசல் காரணமாக ஏற்பட்ட பதற்றத்தால் ஆயிரக்கணக்கான ரசிக‌ர்கள் அம்பேத்கர் மெட்ரோ நிலையம், கப்பன் பூங்கா, எம்.ஜி.சாலை ஆகிய மெட்ரோ நிலையங்களில் குவிந்தனர். அங்கு டிக்கெட் கொடுக்க முடியாமல் ஊழியர்கள் திணறிய நிலையில், தடுப்புகளை தாண்டிக் குதித்து ரசிகர்கள் மெட்ரோ ரயிலில் ஏறினர். அளவுக்கு அதிகமான கூட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை முடங்கியது. இதனால் கப்பன் பூங்கா, எம்.ஜி.சாலை உள்ளிட்ட 8 மெட்ரோ நிலையங்களையும் உடனடியாக மூட மெட்ரோ நிர்வாகம் உத்தரவிட்டது.

ட்ட நெரிசலில் காயமடைந்து, சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட இளைஞர்.படங்கள்: பிடிஐ

மன்னிப்பு கேட்ட சிவகுமார்: இதுகுறித்து தகவலறிந்த முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் பவுரிங் மருத்துவமனைக்குச் சென்று நோயாளிகளை சந்தித்துப் பேசினர். பின்னர் டி.கே.சிவக்குமார் கூறும்போது, ``உயிரிழந்தவர்கள் குறித்து எதையும் தற்போது உறுதிப்படுத்த முடியாது. ஆயிரக்கணக்கான இளம் ரசிகர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தக் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது. நாங்கள் 5 ஆயிரம் போலீஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி இருந்தோம். இந்த துயர சம்பவத்துக்காக கர்நாடக மக்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்''என்றார்.

பாஜக கண்டனம்: பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா செய்தியாளர்களிடம் கூறும்போது, "இந்த துயர சம்பவத்துக்கு கர்நாடக அரசே பொறுப்பேற்க வேண்டும். மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், தனது விளம்பரத்துக்காக அவசரகதியில் இந்த‌ விழாவை அரசு ஏற்பாடு செய்தது. எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்யாமல் இருந்ததாலேயே 11-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகளுக்கு யார் பொறுப்பு என்பதை முதல்வர் சித்தராமையா விளக்க வேண்டும். கூட்ட நெரிசலில் சிக்கியவர்களைக் காப்பாற்ற ஆம்புலன்ஸ் வசதியோ, போதிய பாதுகாப்பு வசதியோ செய்யப்படவில்லை. இதுகுறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.

ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர் சித்தராமையா அறிவிப்பு - கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுகையில், “மாநில அரசும், கிரிக்கெட் சங்கமும் ஏற்பாடு செய்த ஆர்சிபி வெற்றி விழா இப்படியொரு துயர சம்பவமாக மாறும் என எதிர்பார்க்கவில்லை. சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் மொத்தமே 35 ஆயிரம் பார்வையாளர்களைத்தான் அனுமதிக்க முடியும். ஆனால் சுமார் 2 முதல் 3 லட்சம் வரையிலான ரசிகர்கள் குவிந்துவிட்டனர்.

விதான சவுதாவுக்கு எதிரே சுமார் ஒரு லட்சம் பேர் குவிந்தனர். அங்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த சம்பவத்தை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. இதில் அரசியல் செய்யவும் விரும்பவில்லை. மைதானத்தின் கேட்டை உடைத்து உள்ளே நுழைந்ததாலே நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு தரப்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும். இது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ளேன்'' என்றார்.

மன்னிப்பு கேட்ட பிசிசிஐ செயலாளர்: பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா கூறுகையில், ''எனக்கு மிகுந்த அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் முறையாக திட்டமிடவில்லை. இதற்காக பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இது தவறான முன்னுதாரணம் ஆகும்''என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x