Published : 04 Jun 2025 08:34 PM
Last Updated : 04 Jun 2025 08:34 PM
பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. அந்த அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் இன்று (ஜூன் 4) வெற்றிப் பேரணி விழா பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் நீண்ட நெடுங்காலம் கோப்பை வெல்லாத அணியாக இருந்தது ஆர்சிபி. இருப்பினும் அந்த அணிக்கு உத்வேகமும், உற்சாகமும் கொடுத்தனர் அதன் மாறா பற்றுக் கொண்ட ரசிகர்கள். ஆர்சிபி பட்டம் வென்றதும் செவ்வாய்க்கிழமை பின்னிரவு பெங்களூரு நகரம் முழுவதும் தீபாவளி திருவிழா போல பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். அதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இந்நிலையில், வெற்றிக் கோப்பை உடன் ஆர்சிபி அணி இன்று (புதன்கிழமை) விதான் சவுதாவில் இருந்து சின்னசாமி கிரிக்கெட் மைதானத்துக்கு திறந்தவெளி பேருந்தில் உலா வரும் என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அதற்கு காவல் துறை மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியானது. அதே நேரத்தில், கர்நாடக மாநில அரசு மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் ஐபிஎல் கோப்பை வென்ற ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
அகமதாபாத்தில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்த ஆர்சிபி வீரர்கள், மாலை சுமார் 4 மணி அளவில் விதான் சவுதா வந்தடைந்தனர். அங்கு கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார், கர்நாடக மாநில ஆளுநர் தவார் சந்த் கெலாட், அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஆர்சிபி வீரர்களுக்கு மரியாதை செய்தனர். அதை காண விதான் சவுதாவின் வளாகத்தை ஒட்டி பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினர். அந்த இடமே மக்கள் வெள்ளத்தால் சூழப்பட்டது. பலர் வளாகத்தின் வேலிகளை தாண்டி வரவும் முயற்சித்தனர். இந்த நிகழ்வின்போது மழை பொழிவு இருந்தது.
தொடர்ந்து அங்கிருந்து சின்னசாமி கிரிக்கெட் மைதானத்துக்கு சென்று அங்கு ரசிகர்களுடன் இணைந்து ஆர்சிபி வீரர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட இருந்தனர். இந்த நிலையில், ஆர்சிபி அணியின் சாம்பியன்களை பார்க்க ஆர்சிபி அபிமானிகள் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் குவிந்தனர்.
கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி? - ஒரே நேரத்தில் அதிக அளவில் ரசிகர்கள் குவிந்த காரணத்தால் கூட்டத்தை போலீஸாரால் கட்டுப்படுத்த முடியவில்லை என தகவல் கிடைத்துள்ளது. சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பல்வேறு நுழைவு வாயில்களில் அதிகளவிலான மக்கள் திரண்டு இருந்தனர். தொடர்ந்து மைதான கதவுகள் திறக்கப்பட்ட உடன் ஒரே நேரத்தில் அனைவரும் அதன் உள்ளே நுழைய முயன்றனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கிய சிலர் மூச்சுத்திணறல், மயக்கம் அடைந்தனர். இதில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.
பாதிக்கப்பட்டவர்களை துரிதமாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு போலீஸார் மற்றும் ரசிகர்கள் உதவினார். பவுரிங் மருத்துவமனை, வைதேகி மருத்துவமனை மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காயமடந்த நிலையில், 25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். இதை மருத்துவமனை ஊழியர்கள் உறுதி செய்துள்ளனர்.
மைதானத்துக்கு வெளியில் மயக்க நிலையில் இருந்த நபர் ஒருவருக்கு சிபிஆர் மருத்துவ உதவி அளிக்கும் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டன. மேலும், ஒரு நபர் மூச்சு விட சிரமப்படும் காட்சிகளும் வெளியாகின.
மைதானத்துக்கு வெளியில் இருந்த கூட்டம் காரணமாக சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களை தோளிலும், கைகளிலும் ஆம்புலன்ஸ் வரை சுமந்து சென்று, பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தங்கள் அன்பானவர்களை இழந்தவர்கள் துயரத்தில் கலங்கி நின்றனர்.
கூட்டத்தில் இருந்து சிறுவர்களை பாதுகாக்கும் வகையில் மைதானத்தை ஒட்டி நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் மீது அவர்கள் அமர வைக்கப்பட்டனர். கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோரும் வருத்தத்தை தெரிவித்துள்ளனர். நிவாரண நிதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மைதானத்துக்கு வெளியே கூட்ட நெரிசலால் பெரும் துயரச் சம்பவமும், மீட்பு நடவடிக்கைகளும் நடந்து கொண்டிருந்த வேளையில், மைதானத்துக்குள் திட்டமிட்டபடி பாராட்டு விழா தொடங்கியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மெட்ரோ சேவை நிறுத்தம்: விதான் சவுதா மற்றும் கப்பன் பார்க் மெட்ரோ நிலைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்த இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களிலும் அதிக அளவிலான மக்கள் திரண்ட காரணத்தால் முன்னெச்சரிக்கை கருதி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பயணிகள் மாற்று போக்குவரத்து சேவையை நடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் மட்டுமல்லாது பணிக்கு சென்றவர்களும் வீடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
முதல்வர் சித்தராமையா கூறியது என்ன? - கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கூறும்போது, “மாநில அரசும், கிரிக்கெட் சங்கமும் ஐபிஎல் பட்டம் வென்ற ஆர்சிபி அணிக்கு வெற்றி விழாவை இன்று ஏற்பாடு செய்தது. இது இப்படியொரு துயர சம்பவமாக மாறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் மொத்தமே 35,000 பார்வையாளர்களுக்கு மட்டும்தான் பார்வையாளர் மாடத்தில் இடம் உள்ளது. ஆனால், அங்கு சுமார் 2 முதல் 3 லட்சம் வரையிலான மக்கள் வந்திருந்தனர்.
விதான் சவுதாவுக்கு எதிரே சுமார் ஒரு லட்சம் பேர் குவிந்தனர். ஆனால், அங்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இதை அரசு, கிரிக்கெட் சங்கம் மற்றும் மக்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை. கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு தரப்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும். இது தொடர்பாக துணை கமிஷனர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளோம். இந்த துயரம் கொடுத்த வலி வெற்றியின் மகிழ்ச்சியை அழித்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.
நெரிசலில் சிக்கி காயமடைந்து மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்களை முதல்வர் சித்தராமையா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மைதானத்துக்கு வெளியில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த நிலையில், சின்னசாமி மைதானத்தின் உள்ளே ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டம் திட்டமிட்டபடி நடந்ததும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT