Published : 04 Jun 2025 07:58 PM
Last Updated : 04 Jun 2025 07:58 PM

2027 மார்ச் 1-ல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடக்கம்: மத்திய அரசு

புதுடெல்லி: சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 2027 மார்ச் மாதம் தொடங்கும் என்றும், இரண்டு கட்டங்களாக அது நடத்தப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ம் ஆண்டில் இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வரம்பு தேதி 2027 மார்ச் 1 ஆக இருக்கும். லடாக் யூனியன் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பனிப்பொழிவுப் பகுதிகள், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகியவற்றுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வரம்பு தேதி 2026 அக்டோபர் 1 ஆக இருக்கும்.

மேலே குறிப்பிட்ட தேதிகளுடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் நோக்கம் பற்றிய அறிக்கை, மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் பிரிவு 3-ன்படி, ஜூன் 16-ம் தேதி (தோராயமாக) அன்று அரசிதழில் வெளியிடப்படும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948 மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகள் 1990-ன் படி இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்தியாவில் கடைசியாக 2011-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. முதல் கட்டத்தில் வீடுகள் பட்டியலிடுதல் (2010 ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை), இரண்டாவது கட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு (2011 பிப்ரவரி 09 முதல் பிப்ரவரி 28 வரை) நடத்தப்பட்டன. இதற்கான வரம்பு தேதி 2011 மார்ச் 01. ஜம்மு – காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகியவற்றுக்கான வரம்பு தேதி 2010 அக்டோபர் 1 ஆக இருந்தது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021-க்கான முதல்கட்ட தயாரிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், களப்பணி சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2020 ஏப்ரல் 1 முதல் தொடங்கவிருந்தது. இருப்பினும் நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x