Last Updated : 03 Jun, 2025 06:45 PM

3  

Published : 03 Jun 2025 06:45 PM
Last Updated : 03 Jun 2025 06:45 PM

கனடா ஜி7 உச்சி மாநாட்டில் மோடிக்கு அழைப்பு இல்லை? - ‘ராஜதந்திர குளறுபடி’ என காங். விமர்சனம்

புதுடெல்லி: “கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டுக்கு இந்தியா அழைக்கப்படாதது மற்றுமொரு ராஜதந்திர குளறுபடி” என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே "மத்தியஸ்தம்" செய்ய அமெரிக்காவை அனுமதித்த "தவறு"க்குப் பிறகு இந்த ராஜதந்திர குழப்பம் ஏற்பட்டுள்ளது என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

உலகம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் குறித்து ஆலோசிக்கும் ஜி7 உச்சி மாநாடு இம்முறை ஜூன் 15 முதல் 17 வரை கனடாவில் நடைபெற உள்ளது. இதில், ரஷ்யா - உக்ரைன் உள்பட பல்வேறு சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கின்றன. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு கனடா அழைப்பு விடுக்கவில்லை என செய்திகள் வெளியாகி உள்ளன. ஒருவேளை, கனடா இனி அழைப்பு விடுப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டாலும், அதில் பங்கேற்பதற்கான அடிப்படை வேலைகளை மேற்கொள்ள போதுமான காலம் இல்லாததால் பிரதமர் மோடி, மாநாட்டை தவிர்ப்பார் என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அமெரிக்கா அதிபர், பிரான்ஸ் அதிபர், இங்கிலாந்து, ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி மற்றும் கனடா நாடுகளின் பிரதமர்கள் கனடாவின் ஆல்பர்ட்டாவில் உள்ள கனனாஸ்கிஸில் ஜூன் 15 முதல் நடைபெற உள்ள ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க இருக்கிறார்கள். பிரேசில், மெக்சிகோ, தென்னாப்பிரிக்கா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் அதிபர்களுக்கும், ஆஸ்திரேலிய பிரதமருக்கும் உச்சிமாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2014 க்கு முன்பு, ஜி7, ஜி8 ஆக இருந்தது. அப்போது, அதில் ரஷ்யாவும் இருந்தது. ஜி8 உச்சிமாநாட்டுக்கு இந்தியா அழைக்கப்படும். பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங்கின் குரல் அதில் ஒலிக்கும். ஜூன் 2007-இல் ஜெர்மனியில் நடந்த அத்தகைய ஓர் உச்சிமாநாட்டில்தான் காலநிலை மாற்ற பேச்சுவார்த்தைகளுக்கான பிரபலமான மன்மோகன் சிங் -மெர்க்கல் சூத்திரம் வெளியிடப்பட்டது. 2014-க்குப் பிறகும் இந்தியப் பிரதமர்களை அழைக்கும் பாரம்பரியம் தொடர்ந்தது.

ஆனால் இப்போது, ​​6 ஆண்டுகளில் முதல் முறையாக, 'விஸ்வகுரு' கனடா உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார். என்ன சொன்னாலும், இது மற்றொரு பெரிய ராஜதந்திர குளறுபடி என்பதே உண்மை. பல 10 ஆண்டு கால இந்திய வெளியுறவுக் கொள்கையை அமெரிக்கா தலைகீழாக மாற்ற அனுமதித்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய அந்த நாட்டை அனுமதித்த பின்னர் நேரிட்ட மற்றுமொரு ராஜதந்திர குழப்பம் இது" என தெரிவித்துள்ளார்.

காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருக்கலாம் என்று 2023-ஆம் ஆண்டு அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்தியா - கனடா உறவு மோசமடைந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x