Published : 03 Jun 2025 05:30 PM
Last Updated : 03 Jun 2025 05:30 PM
புனே: “இந்தியாவை ஆயிரம் வெட்டுக்களால் ரத்தம் சிந்த வைக்க துடிக்கும் நாடாக பாகிஸ்தான் உள்ளது” என்று முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.
புனே நகரில் உள்ள சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ஜெனரல் அனில் சவுகான், "ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது, ஆரம்ப கட்டத்தில் இந்தியா போர் விமானங்களை இழந்ததை நான் குறிப்பிட்டிருந்தேன். நமது தரப்பு இழப்புகள் குறித்து என்னிடம் கேட்டபோது, அதை தெரிவித்தேன். அதேநேரத்தில், இழப்புகள் முக்கியமல்ல, நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்பதே முக்கியம் என்றும் நான் சொன்னேன். போரில், பின்னடைவுகள் இருந்தாலும், நீங்கள் உங்கள் மன உறுதியைப் பராமரிக்க வேண்டும். இழப்புகள் முக்கியமல்ல, ஆனால் விளைவுகள் முக்கியம். போர் என்று வரும்போது, அதனுடன் அரசியல் உட்பட பல்வேறு கூறுகள் இணைந்தே வரும். ஆபரேஷன் சிந்தூரிலும், போரும் அரசியலும் இணைந்தே இருந்தன.
பஹல்காம் தாக்குதலுக்கு சில வாரங்களுக்கு முன்பு பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஜெனரல் அசிம் முனீர், இந்தியாவுக்கு எதிராகவும், இந்துக்களுக்கு எதிராகவும் விஷத்தை கக்கினார். இந்தியாவை ஆயிரம் வெட்டுக்களால் ரத்தம் சிந்த வைக்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் அணுகுமுறையே இதற்குக் காரணம். பஹல்காமில் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொண்டது ஆழமான கொடுமை.
பாகிஸ்தானில் இருந்து அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும். பயங்கரவாததத்தின் மூலம் இந்தியாவை பிணைக் கைதியாக அந்த நாடு வைத்திருக்க முடியாது என்பதே ஆபரேஷன் சிந்தூரின் பின்னணியில் இருந்த சிந்தனை. பயங்கரவாதம் மற்றும் அணு ஆயுத அச்சுறுத்தலின் நிழலில் இந்தியா வாழப் போவதில்லை. பாகிஸ்தான் இலக்குகள் மீதான இந்திய ஆயுதப்படைகளின் தாக்குதல்கள் மிகவும் துல்லியமானவை. எந்த அளவுக்கு துல்லியம் என்றால், சில இலக்குகள் இரண்டு மீட்டர் எனும் மிக குறுகிய அளவுக்குள் இருந்தன.
மே 10-ம் தேதி அதிகாலை 1 மணி அளவில் தொடர் தாக்குதல்களை தொடங்க பாகிஸ்தான் திட்டமிட்டது. அந்த தாக்குதல் தொடங்கப்பட்ட 48 மணி நேரத்தில் இந்தியாவை மண்டியிட வைக்க வேண்டும் என்பது அதன் இலக்காக இருந்தது. ஆனால், அது சுமார் எட்டு மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது. மே 10 அன்று இந்தியாவுடன் பேச பாகிஸ்தான் முடிவு செய்தது. அதற்குக் காரணம், ராணுவ நடவடிக்கையை தொடர்ந்தால் அது மேலும் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்ததே. 48 மணி நேரம் தொடரும் என்று நினைத்த பாகிஸ்தானின் நடவடிக்கை சுமார் எட்டு மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது. அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினர்.
பேச்சுவார்த்தை மற்றும் பதற்றத்தைக் குறைப்பதற்கான கோரிக்கை பாகிஸ்தானிடமிருந்து வந்தபோது, நாங்கள் அதை ஏற்றுக்கொண்டோம். இந்த நடவடிக்கையின் மூலம் நாம் நமது வரையறையை உயர்த்தியுள்ளோம். பயங்கரவாதத்தை தண்ணீருடன் (சிந்து நதி நீர் ஒப்பந்தம்) இணைத்துள்ளோம், பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு புதிய ராணுவ நடவடிக்கையை நாங்கள் வரைந்துள்ளோம்" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT