Published : 03 Jun 2025 05:04 PM
Last Updated : 03 Jun 2025 05:04 PM
கவுகாத்தி: அசாம் எம்.பி.யும், முன்னாள் முதல்வர் தருண் கோகோயின் மகனுமான கவுரவ் கோகோய் அசாம் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இன்று முறையாக பொறுப்பேற்றார். கவுகாத்தியில் உள்ள கட்சி தலைமையகமான ராஜீவ் பவனில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
அசாம் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு, கவுரவ் கோகோய் ராஜீவ் பவனுக்கு முதல் முறையாக வருகை தந்தார். இந்த நிகழ்வுக்கு முன்னர், அவர் காலையில் காமாக்யா கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். மூத்த தலைவர்கள் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட அசாம் காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட ஆயிரக்கணக்கான காங்கிரஸ் ஆதரவாளர்கள், புதிய மாநிலத் தலைவரை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
ஊடகங்களிடம் பேசிய கவுரவ் கோகோய், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "எனக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பால் நான் பெருமைப்படுகிறேன். நீதி, ஒற்றுமை மற்றும் அமைதிக்காக நிற்கும் காங்கிரஸ் தலைமையிலான அரசை அசாமில் மீண்டும் கொண்டுவருவதே எங்கள் நோக்கம். ஊழல், வன்முறை மற்றும் பிளவுபடுத்தும் அரசியல் பிரச்சினைகளைத் தீர்த்து, அசாம் மக்களுக்கு நீதி கிடைக்க காங்கிரஸ் பாடுபடும்" என்று கூறினார்.
மேலும், ஜாகிர் உசேன் சிக்தர், பிரதீப் சர்க்கார் மற்றும் ருஸ்னினா திர்கி ஆகிய மூன்று செயல் தலைவர்கள் அடங்கிய புதிதாக நியமிக்கப்பட்ட தலைமைக் குழுவையும் கவுரவ் கோகோய் அறிவித்தார். கவுரவ் கோகோயின் நியமனம், வரவிருக்கும் 2026 தேர்தலுக்காக அசாமில் கட்சியைப் புத்துயிர் பெறவைக்க காங்கிரஸ் மேற்கொண்ட முக்கிய வியூகமாக கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT