Published : 03 Jun 2025 04:01 PM
Last Updated : 03 Jun 2025 04:01 PM

ஆபரேஷன் சிந்தூர்: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் வலியுறுத்தி மோடிக்கு 16 எதிர்க்கட்சிகள் கடிதம்

பிரதமர் மோடி | கோப்புப்படம்

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தி இண்டியா கூட்டணியைச் சேர்ந்த 16 எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இந்த விவாகரம் தொடர்பாக இண்டியா கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து கூட்டம் நடத்தினர். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, மற்றும் சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன.

காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், தீபேந்திர ஹூடா, திரிணமூல் காங்கிரஸில் இருந்து டெரிக் ஒ பிரைன், சமாஜ்வாதி கட்சியின் ராம்கோபால் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் மனோஜ் ஜா, சிவசேனாவின் சஞ்சய் ரவுத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இண்டியா கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர். இந்தக் கடிதத்தில் திமுகவும் கையெழுத்திட்ட நிலையில், இன்று (ஜூன் 3) கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாட்டம் காரணமாக கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

அந்தக் கோரிக்கை கடிதத்தில், தேசிய மாநாடு கட்சி, சிபிஎம், ஐயுஎம்எல், சிபிஐ, ஆர்எஸ்பி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கேரள காங்கிரஸ், மதிமுக, சிபிஐ (எம்எல்) உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்களும் கையெழுத்திட்டுள்ளனர். எதிர்க்கட்சி கூட்டணியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

கூட்டம் குறித்து திரிணமூல் காங்கிரஸின் டெரிக் ஓ பிரைன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தி 16 எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளன. பூஞ்ச், உரி, ரஜோரி மற்றும் நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக விவாதிப்பது குறித்து கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு நாடாளுமன்றத்துக்கு பொறுப்பு. நாடாளுமன்றம் மக்களுக்கு பொறுப்பானது. அதனால்தான் நாங்கள் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வலியுறுத்துகிறோம். இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி நாளை பிரதமருக்கு நேரடியாக கடிதம் எழுதும்" என்று தெரிவித்தார்.

ஏப்.22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்பு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆபரேஷன் சிந்தூர் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு விளக்கம் அளிப்பதற்காக நடத்தப்பட்ட கூட்டத்திலும் இந்த கோரிக்கை எழுப்பப்பட்டது.

இதனிடையே, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளிப்பதற்காக பல்வேறு சர்வதேச நாடுகளுக்கு அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் சென்றுள்ளது. அக்குழுக்கள் நாடு திரும்பியதும், மழைக்காலக் கூட்டத் தொடருக்கு முன்பாக, ஜூலை மாதத்தில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x