Published : 03 Jun 2025 12:12 PM
Last Updated : 03 Jun 2025 12:12 PM

பஞ்சாப் | ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை அளித்தவர் கைது!

பிரதிநித்துவப்படம்

சண்டீகர்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ராணுவ நடமாட்டங்கள் தொடர்பான முக்கிய தகவல்களை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்ட குற்றச்சாட்டில் பஞ்சாப்பில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பஞ்சாப் மாநிலம், தார்ன் தரனிலுள்ள மொஹல்லா ரோடுபூரில் வசிக்கும் ககன்தீப் சிங் என்ற ககன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ -உடன் தொடர்பில் இருந்ததாகும், தகவல்களைப் பரிமாற பணம் பெற்றதாகவும், பஞ்சாப் டிஜிபி கவுரவ் யாதவ் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநில டிஜிபி தனது எக்ஸ் பதிவொன்றில் வெளிட்டுள்ள பதிவில் கூறியதாவது: பஞ்சாப் மாநில உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்து கிடைக்கப்பெற்றத் தகவலின்படி, தர் தரன் போலீஸாருன் இணைந்து செயல்பட்ட கூட்டு நடவடிக்கையின் போது, ககன்தீப் சிங் என்ற ககன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் கோபால் சிங் சவ்லா ஆகியோருடன் தொடர்பில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இவர் ஆபரேஷன் சிந்தூரின் போது இந்திய நடமாட்டம் உள்ளிட்ட முக்கிய தகவல்களை பாகிஸ்தானுடன் பகிர்ந்துள்ளார்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், நமது ராணுவத் துருப்புகளின் நடமாட்டங்கள் மற்றும் மூலோபாய இடங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடக்கநிலை விசாரணையில் ககன்தீப் சிங், கடந்த ஐந்து ஆண்டுகளாக பாகிஸ்தானைச் சேர்ந்த காலிஸ்தான் ஆதரவாளரான கோபால் சிங் சவ்லாவுடன் தொடர்பில் இருந்துள்ளார். அவர் மூலமாக ககன்தீபுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு அதிகாரிகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. தகவல்களைப் பரிமாற அவர் பணம் பெற்றுள்ளார்.

இந்திய உளவுத்துறை அதிகாரிகளால் ககன் தீப்பிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ள மொபைல் போனில் இருந்து, பகிரப்பட்ட தகவல்களும், 20 ஐஎஸ்ஐ தொடர்புகளும் மீட்கப்பட்டுள்ளன. இந்த உளவு அமைப்பின் முழுமையான நோக்கம் நிதியாதாரம், தொழில்நுட்பங்கள் குறித்து முழுமையான விசாரணை நடந்து வருகிறது. தார்ன் தரன் நகர காவல் நிலையத்தில், அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு டிஜிபி தெரிவித்துள்ளார்.

பஹஸ்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மே 7ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத நிலைகளின் மீது துல்லிய தாக்குதல் நடத்தியது. இதில் பல பயங்கரவாத நிலைகள் அழிக்கப்பட்டன. முன்னதாக பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மலேர்கோட்லா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட ஆறுபேரை போலீஸார் கைது செய்துள்ளனர் என்பது நினைவுகூறத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x