Published : 03 Jun 2025 07:44 AM
Last Updated : 03 Jun 2025 07:44 AM
காங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் ராணுவ முகாம் அருகில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 6 வீரர்களை காணவில்லை.
சிக்கிம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் டீஸ்டா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏராளமான கிராங்களை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பாலங்களும் சேதம் அடைந்துள்ளன. இதனால் போக்குவரத்து முடங்கியுள்ளது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி லாசென், லாசுங் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்ற ஆயிரக்கணக்கான மக்களும் ஆங்காங்கே தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வடக்கு சிக்கிம் சாட்டன் எனும் பகுதியில் உள்ள ராணுவ முகாம் அருகில் நேற்று முன்தினம் மாலை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 3 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 6 வீரர்களை காணவில்லை.
இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், “இதுவரை நிலச்சரிவில் சிக்கிய 3 வீரர்களின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 4 வீரர்கள் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர். காணாமல்போன 6 வீரர்களை மீட்கும் பணி தொடர்கிறது. சவாலான வானிலைக்கு மத்தியில் இப்பணியில் மீட்புக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன" என்று தெரிவித்தனர்.
நிலச்சரிவில் இறந்த வீரர்கள், ஹவில்தார் லக்விந்தர் சிங், லான்ஸ் நாயக் முனிஷ் தாக்குர், போர்ட்டர் அபிஷேக் லகடா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய ராணுவம் ஆழந்த இரங்கல் தெரிவித்துள்ளது. அசாம் மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. இங்கு 15 மாவட்டங்களை சேர்ந்த 78 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT