Published : 02 Jun 2025 03:40 PM
Last Updated : 02 Jun 2025 03:40 PM
பெங்களூரு: கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் சமீபத்தில் தெரிவித்த சர்ச்சை கருத்துகள் குறித்து பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், “இதை அரசியல் பிரச்சினையாக்க வேண்டாம். நாம் அனைவரும் அண்டை மாநிலங்கள். நாம் அனைவரும் ஒன்றாக வேலை செய்து ஒன்றாக வாழ வேண்டும்’ என்று கூறினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், “இதை அரசியல் பிரச்சினையாக்க வேண்டாம். நாம் அனைவரும் அண்டை மாநிலங்கள். நாம் அனைவரும் ஒன்றாக வேலை செய்து ஒன்றாக வாழ வேண்டும். நமது தண்ணீர் தமிழ்நாட்டுக்கு செல்கிறது, தமிழக மக்கள் இங்கு வருகிறார்கள். நாம் எதிரிகள் அல்ல; நாம் அனைவரும் நண்பர்கள். அந்தப் பிரச்சினையின் வரலாறு குறித்து எனக்குத் தெரியாததால், அதைப் பற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என்றார்.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற 'தக் லைஃப்' திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், 'தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது' என்று கூறி இருந்தார். கமல்ஹாசனின் கருத்துக்கு எதிராக பல்வேறு கன்னட அமைப்புகள் பெலகாவி, மைசூர், பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தின. பெலகாவி உள்ளிட்ட சில இடங்களில் கமல்ஹாசனின் சுவரொட்டிகளை எரித்து, அவருக்கு எதிராக போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர். தனது கருத்துக்காக அவர் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மன்னிப்பு கேட்கத் தவறினால், கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் திரையிடப்படுவதைத் தடுப்போம் என்றும் அவர்கள் மிரட்டினர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, “கன்னட மொழிக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. அது அவருக்கு (கமல்ஹாசன்) தெரியாது.” என்று தெரிவித்துள்ளார். கன்னட மொழியை அவமதித்த நடிகர் கமல்ஹான் உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திர எடியூரப்பாவும் வலியுறுத்தி இருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT