Published : 01 Jun 2025 02:23 PM
Last Updated : 01 Jun 2025 02:23 PM
குவாஹாட்டி: தேசத்தின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம், அருணாச்சல் பிரதேசம், சிக்கிம், மேகாலயா, திரிபுரா, மணிப்பூரில் கனமழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 29-ம் தேதி முதல் மழை பொழிந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதில் 22 பேர் சனிக்கிழமை (மே 31) அன்று மட்டும் உயிரிழந்தனர். இதனை அரசு தரப்பு உறுதி செய்துள்ளது. அசாம் - 8, அருணாச்சல் - 7, மிசோரம் - 4 மற்றும் மேகாலயா - 3 என உயிரிழப்புகள் பதிவாகி உள்ளது.
சிக்கிம்: சிக்கிமில் கனமழை காரணமாக, டீஸ்டா நதியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அந்த மாநிலத்தின் மங்கன் மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என ‘ரெட் அலர்ட்’ கொடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். கியால்ஷிங், நாம்ச்சி, சோரெங், கேங்டாக் மற்றும் பாக்யோங் ஆகிய பகுதிகளுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ கொடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
திரிபுரா: திரிபுரா மாநிலம் முழுவதும் மழை இடைவிடாமல் பொழிந்து வருகின்ற காரணத்தால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மாநில தலைநகரான அகர்தலாவில் மட்டும் வெறும் மூன்று மணி நேரத்தில் சுமார் 200 மிமீ மழை பதிவாகி உள்ளது. மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள மாவட்டங்களில் சுமார் 1300 குடும்பங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனை மாநில முதல்வர் மாணிக் சாஹா உறுதி செய்துள்ளார்.
மணிப்பூர்: கடந்த 48 மணி நேரத்தில் கனமழை, மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக மணிப்பூர் மாநிலத்தில் சுமார் 883 வீடுகள் சேதமடைந்துள்ளன. 3,802 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் சுமார் 64 விலங்குகள் உயிரிழந்துள்ளன.
அசாம்: அசாம் தலைநகரான குவாஹாட்டியின் சில பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள காரணத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதி துண்டிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். சனிக்கிழமை அன்று அங்கு அதி கனமழை பதிவானது. 12 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 58,091 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 791 ஹெக்டேர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
மிசோரம்: சனிக்கிழமை அன்று மிசோரம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். அதில் மூன்று பேர் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள். மிசோரம் மாநிலத்தின் சம்பாய் மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் வாடகை வீட்டில் அவர்கள் வசித்து வந்துள்ளனர். இந்த மாவட்டம் இந்தியா - மியான்மர் எல்லைக்கு அருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT