Published : 31 May 2025 02:52 PM
Last Updated : 31 May 2025 02:52 PM
போபால்: ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது எல்லைப் பாதுகாப்புப் படையின் "துணிச்சலான மகள்கள்" தனித்துவமான வீரத்தை வெளிப்படுத்தினர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
போபாலில் நடந்த லோகமாதா தேவி அஹில்யாபாய் பெண் சக்தி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “சக்தி வழிபாட்டின் போது, நாம் குங்குமம் வழங்குகிறோம். இது இன்று இந்தியாவின் வீரத்தின் அடையாளமாக மாறியுள்ளது. பஹல்காமில், பயங்கரவாதிகள் இந்தியர்களின் உயிர்களை மட்டும் பறிக்கவில்லை. அவர்கள் நமது கலாச்சாரத்தையும் தாக்கினர். அவர்கள் நமது சமூகத்தை பிளவுபடுத்த முயன்றனர்.
மேலும், இந்த பயங்கரவாதிகள் இந்தியாவின் பெண் சக்திக்கு சவால் விடுத்தனர். அது இப்போது பயங்கரவாதிகளையும், அவர்களைக் கையாளுபவர்களையும் திருப்பி தாக்கி உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையாகும். பாகிஸ்தான் ராணுவம் நினைத்துக்கூட பார்க்காத பயங்கரவாதிகளின் மறைவிடங்களை நமது படைகள் அழித்தன. பயங்கரவாதத்தின் மூலம் மறைமுகப் போர்களை இனி பொறுத்துக்கொள்ள முடியாது என்பதை இந்த நடவடிக்கை தெளிவாக உணர்த்திவிட்டது. இப்போது, நாம் எதிரி நாட்டுக்குள்ளும் தாக்குவோம். பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்களையும் அதிக விலை கொடுக்கச் செய்வோம்.
எதிரி தோட்டாக்களை வீசினால், குண்டுகள் மூலம் பதிலடி கொடுக்க தயாராக இருங்கள் என்று இப்போது 140 கோடி இந்தியர்களும் கூறுகிறார்கள். ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் மாறிவிட்டது. இந்த நடவடிக்கையில் எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஜம்மு முதல் பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் எல்லை வரை பிஎஸ்எஃப் மகள்கள் முன்னணியில் இருந்தனர். எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூட்டுக்கு அவர்கள் வலுவான பதிலடி கொடுத்தனர். கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் முதல் எதிரி நிலைகளை அழிப்பது வரை, பிஎஸ்எஃப்-ன் துணிச்சலான மகள்கள் தனித்துவமான வீரத்தை வெளிப்படுத்தினர்.
பள்ளிகள் முதல் போர்க்களங்கள் வரை, இன்று நாடு தனது மகள்களின் துணிச்சலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நம்பிக்கை கொண்டுள்ளது. முதல் முறையாக, சைனிக் பள்ளிகளின் கதவுகள் பெண்களுக்காக திறக்கப்பட்டுள்ளன. 2014 க்கு முன்பு, NCC கேடட்களில் 25% மட்டுமே பெண்களாக இருந்தனர், ஆனால் இப்போது அந்த எண்ணிக்கை 50% ஐ நோக்கி செல்கிறது. பெண் கேடட்களின் முதல் தொகுதி தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) தேர்ச்சி பெற்றுள்ளது.
இன்று, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் முன்னணி நிலைகளில் பெண்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். போர் விமானங்களை ஓட்டுவது முதல் INS விக்ராந்தில் பணியாற்றுவது வரை, பெண் அதிகாரிகள் சிறந்த துணிச்சலை வெளிப்படுத்துகிறார்கள்.
பெண்கள் அதிகாரமளிப்பதற்கான முன்முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. புதிய தொழில்நுட்பங்களிலிருந்து பெண்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு காலம் இருந்தது. ஆனால் இன்று, நமது பெண்கள் நவீன தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்க வேண்டும் என்பதற்காக அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
விவசாயத்தில், ஒரு ட்ரோன் புரட்சி நிகழ்ந்து வருகிறது. நமோ ட்ரோன் சகோதரி முயற்சியின் மூலம், கிராமப்புற பெண்களின் நம்பிக்கையும் வருமானமும் அதிகரித்து வருகிறது. இன்று, நமது மகள்களில் ஏராளமானோர் மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளாக மாறி வருகின்றனர். நமது அனைத்து முக்கிய விண்வெளி பயணங்களிலும், நமது சகோதரிகள் விஞ்ஞானிகளாக பணியாற்றுகின்றனர். சந்திரயான்-3 பயணத்தில், 100-க்கும் மேற்பட்ட பெண் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்," என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT