Published : 31 May 2025 07:33 AM
Last Updated : 31 May 2025 07:33 AM
புதுடெல்லி: தன்னார்வலர்கள் பணியாற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவை உ.பி. அரசு விரிவுபடுத்த உள்ளது. கடந்த 1962-ல் பேரிடர் மேலாண்மை மற்றும் குடிமக்கள் பாதுகாப்பு உள்ளிட்ட உதவிகளுக்காக சிவில் டிஃபன்ஸ் என்கிற சிவில் பாதுகாப்பு பிரிவு தொடங்கப்பட்டது.
இப்பிரிவு, உ.பி., ஒடிசா, குஜராத், இமாச்சல், பஞ்சாப், ராஜஸ்தான், கோவா, ஹரியானா, ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் 244 மாவட்டங்களில் உள்ளது.
தன்னார்வலர்கள் பணியாற்றும் இப்பிரிவு, சில மாநிலங்களில் பெயரளவுக்கும் பாகிஸ்தான் எல்லைப்புற மாநிலங்களில் தீவிர செயல்பாட்டிலும் உள்ளது. உ.பி.யில் தற்போது 26 மாவட்டங்களில் மட்டும் இப்பிரிவு செயல்படுகிறது.
இதன் நிர்வாக கட்டுப்பாட்டாளராகவும், தன்னார்வலர்களை தேர்வு செய்பவராகவும் மாவட்ட ஆட்சியர் உள்ளார். உ.பி. பிரயாக்ராஜில் இந்த ஆண்டு நடைபெற்ற மகா கும்பமேளாவில் சிவில் பாதுகாப்பு பிரிவினர் பெரும்பங்காற்றினர்.
எனவே, இவர்களை மேலும் பயன்படுத்தும் பொருட்டு உ.பி.யின் எஞ்சிய 49 மாவட்டங்களிலும் இப்பிரிவை விரிவுபடுத்த முதல்வர் யோகி அரசு முடிவு செய்துள்ளது.
இத்துடன் சிவில் பாதுகாப்பு பிரிவை முறைப்படுத்தி மேலும் பல வசதிகள் செய்துதர உள்ளது. இப்பிரிவு தற்போது அவசரகால சூழ்நிலைகளை சமாளிக்க அரசுக்கு உதவி வருகிறது. இனி, மேலும் பல்வேறு புதிய சேவைகளில் ஈடுபடுத்தப்பட உள்ளது. உபி.யில் வெறும் 15 மாவட்டங்களில் இருந்த இப்பிரிவு, 2015-ல் மேலும் 11 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT