Last Updated : 30 May, 2025 06:59 PM

 

Published : 30 May 2025 06:59 PM
Last Updated : 30 May 2025 06:59 PM

கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - ஆறுகளில் வெள்ளப் பெருக்கால் எச்சரிக்கை!

கேரளாவில் மீட்புப் பணிகள் தீவிரம். | படம்: எஸ்.கே.மோகன்

திருவனந்தபுரம்: கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் சூழலில், அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் 20 செ.மீ.க்கு மேல் அதி கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், அடுத்த 24 மணி நேரத்தில் பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கேரளாவில் மீதமுள்ள 6 மாவட்டங்களுக்கும் கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளன.

கண்ணூர், காசர்கோடு மற்றும் இடுக்கி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு மட்டும் இன்று காலை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி, சனிக்கிழமைக்குப் பிறகு கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக அறிகுறிகள் உள்ளன. இதனிடையே, பல இடங்களில் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஒரு வாரத்தில், கேரளா மற்றும் மாஹே பகுதியில் 'அதிகப்படியான' மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு இந்தப் பகுதியில் 52.1 மிமீ மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி வழக்கமாக தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு மே 24ம் தேதியே கேரளாவில் பருவமழை தொடங்கியது.

ஆறுகளில் அதிகரிக்கும் நீர்மட்டம்: கேரளாவில் உள்ள ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், கரையோரங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கோரப்புழாவின் துணை நதியான பூனூர்புழாவில் நீர்மட்டம் மிக அதிகமாக உள்ளது. கோரப்புழாவுக்கு அதன் குன்னமங்கலம் மற்றும் கொல்லிக்கல் நிலையங்களில் வெள்ளத்துக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வயநாடு மாவட்டத்தில் உள்ள கபானி ஆற்றில் அதன் காக்கவயல் நிலையத்திலும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குட்டியடி ஆறு மற்றும் சாலியார் போன்ற பிற ஆறுகளிலும் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x