Last Updated : 30 May, 2025 03:32 PM

2  

Published : 30 May 2025 03:32 PM
Last Updated : 30 May 2025 03:32 PM

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” - பிரதமர் மோடி

கரகாட்: மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பிஹார் மாநிலம் கரகாட்டில் இன்று ரூ.48,520 கோடி மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து பேசிய அவர், “கடந்த ஆண்டுகளில் வன்முறை மற்றும் அமைதியின்மையை பரப்பியவர்களை நாங்கள் எவ்வாறு ஒழித்தோம் என்பதற்கு பிஹார் மக்கள் சாட்சிகளாக உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு சசாரம் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் நக்சலைட் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தியது. அவர்களுக்கு பாபா சாகேப் அம்பேத்கர் மீது நம்பிக்கை இல்லை. அந்தச் சூழ்நிலைகளிலும் கூட, நிதிஷ் குமார் இங்கு வளர்ச்சிக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார்.

2014-க்கு முன்பு, 75-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் நக்சலைட்களால் பாதிக்கப்பட்டன. இப்போது, ​​18 மாவட்டங்கள் மட்டுமே நக்சலைட்களால் பாதிக்கப்பட்டுள்ளன. மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

பிஹாரில் நடந்த காட்டாட்சி நிதிஷ் குமாரால் அப்புறப்படுத்தப்பட்டபோது, ​​மாநிலம் முன்னேற்றப் பாதையில் செல்லத் தொடங்கியது. உடைந்த நெடுஞ்சாலைகள், மோசமான ரயில் பாதைகள், திட்டமிடப்பட்ட விமான சேவை என இந்த சகாப்தம் இப்போது வரலாறாகிவிட்டது. பிஹாரில் நான்கு வழி நெடுஞ்சாலைகளின் வலைப்பின்னல் கட்டப்பட்டு வருகிறது. அனைத்து முக்கிய நதிகளிலும் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன” என்று பிரதமர் மோடி கூறினார்.

சமீபத்தில், சத்தீஸ்கரின் நாராயண்பூரில் சிபிஐ (மாவோயிஸ்ட்) பொதுச் செயலாளராக இருந்த பசவராஜுவை பாதுகாப்பு படையினர் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். அதற்கடுத்த நாட்களில் பல மாவோயிஸ்ட் தளபதிகள் உட்பட பல நக்சல்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x