Published : 30 May 2025 12:20 PM
Last Updated : 30 May 2025 12:20 PM

''முக்கிய பிரச்சினை முடிவுக்கு வந்தது'': காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்தை பாராட்டிய சல்மான் குர்ஷித்!

சல்மான் குர்ஷித்

புதுடெல்லி: "ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு பிரிவு 370, அப்பிரதேசம் இந்தியாவின் பிற பகுதியில் இருந்து தனியானது என்ற கருத்தை நீண்ட காலமாக உருவாக்கி வந்தது. அப்பிரிவினை அரசு ரத்து செய்ததன் மூலம் அந்தக் கருத்து இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது" என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்குவதற்கான அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ள சல்மான் குர்ஷித், இந்தோனேசியாவில் உள்ள சிந்தனையாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், "அரசியலமைப்பு பிரிவு 370ன் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ஒரு தனிமைப்படுத்தப்பட்ட உறவினை ஏற்படுத்தியது. அது மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. நீண்ட காலமாக காஷ்மீர் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது.

ஆனால், பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு இந்தப் பிரச்சினை இறுதியில் முடிவுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் 65 சதவீத வாக்குப்பதிவுடன் தேர்தல் நடைபெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீரில் இன்று ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளது. எனவே காஷ்மீரில் நடந்த அனைத்தையும், காஷ்மீருக்கு வந்துள்ள செழிப்பையும் அழிக்க விரும்புகிறார்கள்" என்று தெரிவித்தார்.

ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மையை விளக்குவதற்காக ஐக்கிய ஜனதாதளம் கட்சி எம்.பி. சஞ்சய் குமார் ஜா தலைமையிலான அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான சல்மான் குர்ஷித் இடம்பெற்றுள்ளார். இந்தக் குழு இந்தோனேசியா, மலேசியா, தென்கொரியா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x