Last Updated : 29 May, 2025 12:39 PM

5  

Published : 29 May 2025 12:39 PM
Last Updated : 29 May 2025 12:39 PM

''பொங்கி எழும் வெறியர்கள்'' - தன்னை விமர்சிப்போர் குறித்து சசி தரூர் காட்டம்

கோப்புப் படம்

புதுடெல்லி: “பயங்கரவாத தாக்குதல்களுக்கான இந்தியாவின் பதிலடி பற்றி மட்டுமே நான் பேசினேன். முந்தைய போர்களைப் பற்றி அல்ல என்பதை பொங்கி எழும் வெறியர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.” என்று தன்னை விமர்சிப்போருக்கு சசி தரூர் பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பனாமாவில் ஒரு நீண்ட மற்றும் வெற்றிகரமான நாளுக்குப் பிறகு, ஆறு மணி நேரத்தில் கொலம்பியாவின் போகோடாவிற்குப் புறப்படுவதற்காக நள்ளிரவில் நான் செல்ல வேண்டும். எனவே இதற்கு எனக்கு உண்மையில் நேரமில்லை. எனினும், கடந்த காலங்களில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய வீரம் பற்றிய எனது அறியாமையைப் பற்றிப் பொங்கி எழும் வெறியர்களுக்காக நான் கூற விரும்புவது இதுதான்.

1. பயங்கரவாதத் தாக்குதல்களுக்கான பழிவாங்கல்களைப் பற்றி மட்டுமே நான் தெளிவாகவும் வெளிப்படையாகவும் பேசினேன், முந்தைய போர்களைப் பற்றி அல்ல.

2. நான் பேசுவதற்கு முன் சமீபத்திய ஆண்டுகளில் மட்டும் நடந்த பல தாக்குதல்களைப் பற்றிய குறிப்புகள் இருந்தன. முந்தைய இந்திய எதிர்வினைகள் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கும் சர்வதேச எல்லைக்கும் நாம் பொறுப்புடன் மரியாதை செலுத்தியதால் தவிர்க்கப்பட்டன.

எனினும், வழக்கம் போல் விமர்சகர்களும் ட்ரோல்களும் எனது கருத்துக்களையும் வார்த்தைகளையும் சிதைக்கிறார்கள். அதனை நான் வரவேற்கிறேன். உண்மையில் நான் சிறந்த விஷயங்களைச் செய்ய வேண்டும். குட் நைட்.” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பனாமாவில் சசி தரூர் நேற்று (மே 28) ஆற்றிய உரையை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் எம்பியுமான உதித் ராஜ் கடுமையாக விமர்சித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ”என் அன்பான சசி தரூர், நீங்கள் இந்தியாவில் தரை இறங்கும் முன் பிரதமர் மோடி உங்களை பாஜகவின் சூப்பர் செய்தித் தொடர்பாளராக அறிவிக்கலாம், ஏன் வெளியுறவு அமைச்சராகவும்கூட அறிவிக்கலாம்.

பிரதமர் மோடிக்கு முன்பு இந்தியா ஒருபோதும் LOC மற்றும் சர்வதேச எல்லையைக் கடக்கவில்லை என்று கூறி காங்கிரஸின் பொற்கால வரலாற்றை நீங்கள் எப்படி இழிவுபடுத்த முடியும். 1965 ஆம் ஆண்டில் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் பல இடங்களில் நுழைந்தது. இது லாகூர் பகுதியில் பாகிஸ்தானியர்களை முற்றிலும் ஆச்சரியப்படுத்தியது. 1971 ஆம் ஆண்டில், இந்தியா பாகிஸ்தானை இரண்டு துண்டுகளாக கிழித்தது.

UPA அரசாங்கத்தின் போது பல சர்ஜிக்கல் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன, ஆனால் அரசியல் ரீதியாக லாபம் ஈட்டுவதற்காக அது பயன்படுத்தப்படவில்லை. உங்களுக்கு இவ்வளவு கொடுத்த கட்சிக்கு நீங்கள் எப்படி இவ்வளவு நேர்மையற்றவராக இருக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

மேலும் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ”காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், பாஜகவின் சூப்பர் செய்தித் தொடர்பாளராக செயல்படுகிறார். பிரதமர் மோடிக்கும் அரசாங்கத்திற்கும் ஆதரவாகப் பேசுவதில் அவர் பாஜக தலைவர்களையும் விஞ்சுகிறார். முந்தைய அரசாங்கங்கள் என்ன செய்தன என்பது அவருக்கு (சசி தரூர்) தெரியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

‘சர்ச்சையை ஏற்படுத்திய சசி தரூர் பேச்சு’ - தென் அமெரிக்க நாடான பனாமாவில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய சசி தரூர், “இந்தியா அமைதியாக இருக்க விரும்புகிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக எல்லையின் மறுபக்கத்தில் உள்ள எங்கள் நண்பர்கள்(பாகிஸ்தான்) அதை விரும்புவதில்லை. கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக நாங்கள் தொடர் தாக்குதல்களைச் சந்தித்துள்ளோம்.

பயங்கரவாதிகளை கையாள்வதில் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்னவென்றால், பயங்கரவாதிகள் தாங்கள் கொடுக்க வேண்டிய விலையை உணர்ந்துள்ளனர்.” என்று தெரிவித்திருந்தார்.

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தை அம்பலப்படுத்தும் நோக்கில் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் நாடாளுமன்றக் குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தலைமையிலான குழு, அமெரிக்கா, பனாமா, கயானா, பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் பயணம் மேற்கொண்டு வருகிறது.

சசி தரூர் தலைமையிலான குழுவில், ஷாம்பவி, சர்பராஸ் அகமது, ஹரிஷ் பாலயோகி, ஷஷாங்க் மணி திரிபாதி, புபனேஸ்வர் காலிதா, மிலிந்த் தியோரா, தேஜஸ்வி யாதவ், தரஞ்சித் சிங் சாந்து உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

அமெரிக்கா, கயானா, பனாமா நாடுகளில் இக்குழு தனது சுற்றுப் பயணத்தை நிறைவு செய்துள்ளது. இந்த பயணங்களில், சசி தரூர் மிகச் சிறப்பாக செயல்படுவதாகவும், அவரது உரை கவரக்கூடியதாக இருப்பதாகவும் பலரும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் செயல்பாட்டைவிட சசி தரூரின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருப்பதாக பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x