Published : 28 May 2025 03:10 PM
Last Updated : 28 May 2025 03:10 PM
மும்பை: மும்பையில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கும் சூழலில் அங்கு தேங்கிய மழை நீரை வெளியேற்றும் நிலையங்களை ஒழுங்காக பராமரித்து சரியாக இயக்காத ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி அபராதம் விதித்துள்ளது. ஹிண்ட்மடா, காந்தி மார்கெட், யெல்லோ கேட் மற்றும் சுன்னாபட்டி ஆகிய நான்கு இடங்களில் உள்ள மழைநீர் வெளியேற்று நிலையங்களின் ஒப்பந்ததாரர்களுக்கும் தலா ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மும்பை மாநகராட்சி அதிகாரிகள், மேற்கூறிய பகுதிகளில் செயல்பட்டு வந்த மழைநீர் வெளியேற்ற நிலையங்கள் போதுமான அளவில் மழை நீரை வெளியேற்றும் திறன் கொண்டதாக இல்லை. இதனாலேயே மழை நீர் தேங்கி பரவலாக பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி ஒப்பந்ததாரர் நகர வளர்ச்சிக்கு ஏற்ப மழை நீர் வெளியேற்றும் நிலையத்தின் திறனை மேம்படுத்த வேண்டும். ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை. இதனால் அவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது“ என்றார்.
மெட்ரோ பாதிப்பு நிலவரம் என்ன? மும்பை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலத்தடி மெட்ரோவில், ஆச்சாரிய அத்ரே சவுக் தவிர அனைத்தும் பாதுகாப்பாக, இயல்பாக இருப்பதாக மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. ஆச்சாரிய அத்ரே சவுக் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பட்ட வெள்ளநீர் பாதிப்பு ஒரு திடீர் நிகழ்வு என்றும் அதனைத் தடுக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ள மும்பை மெட்ரோ ரயில் நிறுவனம் (எம்எம்ஆர்சி) நிலத்தடி மெட்ரோ அமைப்பில் எந்தவித பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எம்எம்ஆர்சி நிர்வாக இயக்குநர் அஸ்வினி பிடே செவ்வாய்க்கிழமை இரவில் வெளியிட்டுள்ள வீடியோ அறிக்கையில், “நிலத்தடி மொட்ரோவைப் பொறுத்தவரையில் எந்த விதமான பாதுகாப்புப் பிரச்சினையும் இல்லை. திங்கள்கிழமை காலையில் ஏற்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்து நிலையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
இது எப்போதாவது நடக்கும் நிகழ்வு. வெறும் ஒன்றரை மணிநேரத்தில் 90 மி.மீட்டர் மழை பொழிந்ததால் திடீரென நடந்துவிட்ட அந்த சம்பவத்தை அதனைத் தடுக்க முடியவில்லை. ஆரே (ஜேவிஎல்ஆர்) மற்றும் வோர்லி வரையிலான நிலத்தடி மெட்ரோ வழித்தடம் பாதுகாப்பாக உள்ளது. ஆசார்யா அத்ரே தவிர ஒட்டுமொத்த வழித்தடமும் பாதுகாப்பாக இருக்கிறது, இயல்பாக செயல்பட்டது.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். நீர் உள்ளே வராதபடி நிரந்த தடுப்புச்சுவர் தற்போது கட்டப்பட்டு வருகிறது. எல்லாவற்றையும் விட பயணிகள் பாதுகாப்பு முக்கியமானது, அனைத்து நிலையான நடவடிக்கைகளும் மும்பை மெட்ரோ ரயில் கார்பரேஷனால் பின்பற்றப்படுகிறது. மக்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் பயணம் செய்வதை நாங்கள் உறுதி செய்கிறோம்.” என்று கூறியுள்ளார்.
முன்னதாக, மும்பையில் திங்கள் கிழமை பெய்த மழையின் போது மத்திய மும்பையில் உள்ள வோர்லி நாகாவில் இருக்கும் ஆச்சாரிய அத்ரே சவுக் நிலத்தடி மெட்ரோ ரயில் நிலையத்தில் மழை நீர் புகுந்தது. இந்தச் சம்பவம் பயணிகளின் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியதுடன், அரசியல் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT