Published : 28 May 2025 07:23 AM
Last Updated : 28 May 2025 07:23 AM
ஜம்மு: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது 72 பாகிஸ்தான் ராணுவ நிலைகள் முழுமையாக அழிக்கப்பட்டன என்று எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜம்மு பிராந்திய பிஎஸ்எப் ஐஜி சுஷாங்க் ஆனந்த் ஜம்முவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மே 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் இந்திய, பாகிஸ்தான் ராணுவங்களுக்கு இடையே மிகக் கடுமையான சண்டை நடைபெற்றது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் அதிதீவிர தாக்குதல்களை நடத்தியது.
இருதரப்புக்கு இடையே கடுமையான சண்டை நடைபெற்று கொண்டிருந்தபோது ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து சுமார் 50 தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி செய்தனர். அந்த முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. மேலும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்ட தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினோம். இதில் ஏராளமான தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான தாக்குதலின்போது அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தினோம். குறிப்பாக பிஎஸ்எப் வீரர்கள் வித்வன்ஸக் துப்பாக்கிகளை பயன்படுத்தினர். இதன்மூலம் 1,800 கி.மீ. தொலைவு இலக்குகளை துல்லியமாக குறிவைத்து சுட முடியும்.
தானியங்கி ராக்கெட் லாஞ்சர் மூலம் சக்திவாய்ந்த குண்டுகள் வீசப்பட்டன. இதன்மூலம் 2,100 தொலைவு வரையிலான இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கி அழித்தோம். மேலும் 2.7 எம்எம் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளையும் பயன்படுத்தினோம். இந்த துப்பாக்கிகள் மூலம் பாகிஸ்தான் ராணுவ டாங்கிகள் மற்றும் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. நடுத்தர இயந்திர துப்பாக்கி மூலம் பாகிஸ்தான் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்த துப்பாக்கிகள் மூலம் ஒரு நிமிடத்தில் 600 முதல் 1000 குண்டுகளை சுட முடியும்.
சிந்தூர் பெயர்: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் 72 ராணுவ நிலைகள் முழுமையாக தகர்க்கப்பட்டன. பாகிஸ்தான் ராணுவத்தின் ஏராளமான பதுங்கு குழிகள், கண்காணிப்பு கோபுரங்கள் அழிக்கப்பட்டன. காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பிஎஸ்எப் படையை சேர்ந்த வீராங்கனைகளே தாக்குதலை நடத்தினர். அவர்களை பாராட்டி வாழ்த்துகிறேன்.
இவ்வாறு பிஎஸ்எப் ஐஜி சுஷாங்க் ஆனந்த் தெரிவித்தார். பிஎஸ்எப் துணை கமாண்டர் நேகா கூறும்போது, “ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது எனது தலைமையிலான படை பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் முகாமிட்டு இருந்தது. எங்களது படையில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். குண்டு மழைக்கு நடுவில் எதிரியின் ராணுவ நிலைகளை மிகத் துல்லியமாக தாக்கி அழித்தோம். அதேநேரம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து ஜம்மு காஷ்மீருக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அவர்களையும் விரட்டி அடித்தோம். இதில் ஏராளமான தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்" என்று தெரிவித்தார்.
பிஎஸ்எப் வீரங்கனை சங்கரி தாஸ் கூறும்போது, “பஹல்காம் தாக்குதலின்போது நமது பெண்களின் குங்குமத்தை பாகிஸ்தான் தீவிரவாதிகள் பறித்தனர். இதற்கு பதிலடியாக பிஎஸ்எப் வீராங்கனைகள் பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டினோம்" என்று தெரிவித்தார்.
தாக்குதல் வீடியோ வெளியீடு: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பிஎஸ்எப் நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோவை பிஎஸ்எப் ஐஜி சுஷாங்க் ஆனந்த் வெளியிட்டார். இந்த வீடியோவில் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் தீ பற்றி எரியும் காட்சிகள், இந்திய எல்லையில் இருந்து குண்டுகள் சீறிப் பாயும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தானுக்கு எதிரான போரில் பயன்படுத்திய வித்வன்ஸக் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பிஎஸ்எப் வீரர்கள் நிருபர்களிடம் காண்பித்து செயல் விளக்கம் அளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT