Published : 28 May 2025 06:57 AM
Last Updated : 28 May 2025 06:57 AM
அகமதாபாத்: இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உள்நாட்டு பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். குஜராத் தலைநகர் காந்தி நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் ரூ.5,536 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார்.
சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் அவர் பேசியதாவது: இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதி ஆக்கிரமிக்கப்பட்டது. அந்த பகுதியை மீட்க சர்தார் படேல் திட்டமிட்டார். ஆனால் அவரது திட்டம், அறிவுரை ஏற்கப்படவில்லை. இதன் காரணமாக கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக எல்லை தாண்டிய தீவிரவாத பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறோம்.
இந்தியாவுடன் நேரடி போரில் வெற்றி பெற முடியாது என்பது பாகிஸ்தானுக்கு நன்றாக தெரியும். இதன்காரணமாக தீவிரவாதம் மூலம் அந்த நாடு மறைமுக போரில் ஈடுபட்டு வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் செயல்பட்ட 9 தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் 22 நிமிடங்களில் அழித்தது.
இந்த ராணுவ நடவடிக்கை வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. கடந்த காலங்களில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கோரப்பட்டன. இப்போது பகிரங்கமாக வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு உள்ளோம். இந்திய ராணுவத்தின் துல்லிய தாக்குதல்களில் உயிரிழந்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் மரியாதை செலுத்தியது. இதன்மூலம் அந்த நாட்டின் உண்மை முகம் அம்பலமாகி உள்ளது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம்: 1960-ல் சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவில் சிந்து நதி கட்டமைப்புகளில் கட்டப்பட்ட அணைகள் முறையாக தூர்வாரப்படவில்லை. இப்போது அணைகளை தூர்வாரி நீர் இருப்பை அதிகரித்து வருகிறோம். பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை நாம் எந்தவொரு உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. ஆனால் அந்த நாடு இப்போதே அச்சத்தில் வியர்த்து நடுங்கி கொண்டிருக்கிறது.
2014 மே 26-ம் தேதி பிரதமராக நான் பதவியேற்றேன். அப்போது உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா 11-வது இடத்தில் இருந்தது. எனது ஆட்சிக் காலத்தில் கரோனா பெருந்தொற்று, இயற்கை பேரிடர்கள், அண்டை நாடுகளுடன் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன. கரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றோம். இயற்கை பேரிடர்களை திறம்பட எதிர்கொண்டோம்.
அண்டை நாடுகளுடனான பிரச்சினைகளுக்கு ராஜ்ஜியரீதியில் தீர்வு காணப்பட்டது. கரோனா பெருந்தொற்று காலத்திலும் நாட்டின் பொருளாதாரத்தில் அதிதீவிர கவனம் செலுத்தப்பட்டது. இதன்காரணமாக உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் தற்போது 4-வது இடத்துக்கு இந்தியா முன்னேறி உள்ளது. விரைவில் 3-வது இடத்தை எட்டிப் பிடிக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். வரும் 2047-ம் ஆண்டில் 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவோம். அப்போது வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம்.
சீன விநாயகர் சிலைகள்: இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்த ஒவ்வொரு இந்தியரும் உள்நாட்டு தயாரிப்புகளை மட்டுமே வாங்க வேண்டும். ஒவ்வொருவரும் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அதில் அந்நிய பொருட்களை தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக உள்நாட்டு தயாரிப்புகளை வாங்க வேண்டும். வெளிநாட்டில் (சீனாவில் ) இருந்து விநாயகர் சிலைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஹோலி பண்டிகையில் பயன்படுத்தப்படும் வண்ண பொடிகளும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது.
இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இந்திய தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வெளிநாட்டு பொருட்களை விற்க மாட்டோம் என்று வியாபாரிகள் உறுதியேற்க வேண்டும். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை உலகத் தரத்தில் தயாரிக்க வேண்டும். பொருட்களின் தரத்தில் இந்திய நிறுவனங்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிராவில் இருந்து குஜராத் தனியாகப் பிரிக்கப்பட்டது. அப்போது குஜராத் பின்தங்கிய நிலையில் இருந்தது. கனிம வளம் இல்லாத இந்த மாநிலம் எப்படி முன்னேறும் என்று சிலர் கேள்வி எழுப்பினர். இப்போது உப்பு முதல் வைரங்கள் வரை குஜராத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. குஜராத்தின் வளர்ச்சியை பார்த்து ஒட்டுமொத்த உலகமும் வியப்பில் ஆழ்ந்திருக்கிறது. வரும் 2036-ம் ஆண்டில் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த திட்டமிட்டு உள்ளோம். இந்த போட்டிகள் குஜராத்தில் நடத்தப்படும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT