Last Updated : 27 May, 2025 06:15 PM

 

Published : 27 May 2025 06:15 PM
Last Updated : 27 May 2025 06:15 PM

பெங்களூருவில் வரலாறு காணாத மழை: கர்நாடகாவுக்கு 5 நாட்கள் ரெட் அலர்ட்!

இடம்: உடுப்பி | படம்: உமேஷ்

பெங்களூரு: கர்நாடகாவின் கடலோர பகுதிகளுக்கு அடுத்து வரும் 5 நாட்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுத்துள்ளது. பெலகாவியில் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று வயது சிறுமி உயிரிழந்தார். இதனிடையே, பெங்களூருவில் வரலாறு காணாத மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.

தென்மேற்கு பருவமழை கர்நாடகாவில் தீவிரமடைந்துள்ள நிலையில், திங்கள்கிழமை தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்ததால் பல்வேறு மாவட்டங்களில் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டது. கடலோர கர்நாடகாவுக்கு 5 நாட்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இப்பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் 20 சென்டி மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது.

தட்சிண கன்னடா மற்றும் உத்தர கன்னடா மாவட்டங்களில், பல்வேறு நிலச்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பெல்தங்கடியைச் சுற்றியுள்ள ஆறுகளில் நீர் மட்டம் கடுமையாக உயர்ந்துள்ளது, இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

பெங்களூரு இந்த மாதத்தில் அதிகாரப்பூர்வமாக, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச மழைப் பொழிவை பதிவு செய்துள்ளது. திங்கள்கிழமை (மே 26) காலை வரை 307.9 மிமீ ஒட்டுமொத்த மழைப் பொழிவைப் பதிவு செய்துள்ளது. இது பெங்களூருவுக்கு மே 2023-ல் அதன் முந்தைய சாதனையான 305.4 மி.மீ மழைப் பொழிவை விட அதிகமாகும். அதேபோல கடலோர கர்நாடகாவில் சுமார் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிக அதிகப்படியான மழைப் பொழிவு பதிவாகியுள்ளது

தட்சிண கன்னடத்தின் பந்த்வால் தாலுகாவில் உள்ள மஞ்சி கிராம பஞ்சாயத்தில் மே 27-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேரத்தில் 186.5 மிமீ மழைப் பொழிவு பதிவாகியுள்ளது, இது கர்நாடகாவில் பதிவான இரண்டாவது அதிகபட்ச மழைப் பொழிவாகும்

மங்களூரு நகரின் பல பகுதிகள் வடிகால்களில் நிரம்பி வழிந்ததால் நீரில் மூழ்கின. கடந்த 24 மணி நேரத்தில் மங்களூரு மாவட்டத்தின் பல பகுதிகளில் 150 மி.மீ மழை பெய்துள்ளது. சுல்லியாவின் பெல்லாரேயில் அதிகபட்சமாக 200.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஹாசன் மற்றும் சிக்கமகளூருவின் மல்நாடு மாவட்டங்கள், ஷிரடி மற்றும் சார்மாடி மலைத் தொடர்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தட்சிண கன்னடா மாவட்ட ஆட்சியர் ஆனந்த், மே 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் அனைத்து அங்கன்வாடிகள், தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் பியூ கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x