Last Updated : 27 May, 2025 01:34 PM

4  

Published : 27 May 2025 01:34 PM
Last Updated : 27 May 2025 01:34 PM

‘ப.சிதம்பரத்தின் கருத்தால் இண்டியா கூட்டணிக்கு பலன்’ - எஸ்.வி.ரமணி

ப. சிதம்பரம் | கோப்புப் படம்

இருவாரங்களுக்கு முன் காங்கிரஸின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் டெல்லியில் ஒரு நூல் வெளியீட்டு விழாவில் பேசினார். நம் கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் மற்றும் மிருதுஞ்சய் சிங் யாதவ் ஆகியோர் எழுதிய புத்தக வெளியீட்டு விழா அது. இதில் ப.சிதம்பரம் வெளியிட்ட பல கருத்துகள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

சிதம்பரம் கருத்துகளுக்கு வலு சேர்க்கும் வகையில் இன்று இண்டியா கூட்டணியிலும், தேசிய அரசியலிலும் நிலவும் சூழல் மீது இக்கட்டுரை மூலம் நான் ஒரு பார்வை செலுத்த விரும்பினேன். ‘ஆபரேஷன் சிந்தூர்’, நாட்டின் அரசியல் சூழ்நிலையை குறிப்பிடத்தக்க வகையில் மாற்றியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் படிமத்தை இது ஒரு புறம் வலுப்படுத்தியுள்ளது.

அதேநேரத்தில், மறுபுறம் இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு இடையில் குழப்பத்தை உருவாக்கியுள்ளது. இத்தகைய சூழலில் மூத்த காங்கிரஸ் தலைவரான ப. சிதம்பரத்தின் கருத்துக்கள், இண்டியா கூட்டணி சந்திக்க வேண்டிய சவால்களை சரியான நேரத்தில் நினைவூட்டுகின்றன.

அவருடைய கருத்துகளை உள்ளடக்கிய விரிவான பார்வை, காங்கிரஸ் கட்சி எதிர்நோக்கும் சவால்களை சுட்டிக்காட்டுகிறது. நாட்டின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடி வரை பாஜக முழுவதுமாகப் பரவியுள்ளது. பாஜகவின் நிறுவன வலிமையும், அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழேயுள்ள பல்வேறு அரசாங்க அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் அதன் செல்வாக்கினையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அவர் சுட்டிக் காட்டுவது முற்றிலும் உண்மையானது.

காங்கிரஸ் தலைவர்கள், அவர் கூறியிருப்பது தங்களது கட்சியை விமர்சிப்பதாகவும் மற்றும் உள்கட்சி கருத்துக்களுக்கு முரண்பாடாக இருப்பதாகப் பார்க்கக் கூடாது. இந்திய அரசியலின் உண்மையான நிலையை வெளிக்கொணரும் நேர்மையான சிந்தனையாகவே அதை எடுத்துக்கொள்ளவேண்டும். சிதம்பரத்தின் கருத்துக்கள், காங்கிரஸின் வருங்கால வளர்ச்சியைப் பற்றிய கசப்பான உண்மைகளை எடுத்துரைக்கின்றன.

அவற்றை ஆக்கபூர்வமான ஆலோசனை என்று காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணியை சார்ந்த கட்சிகள் எடுத்துக்கொள்ள முயல வேண்டும். இதுதான், இண்டியா கூட்டணியை பலப்படுத்துவதற்கும், எதிர்கொள்ளவேண்டிய சவால்களை சந்திப்பதற்கு தேவையான வியூகங்கள் அமைப்பதற்கும் உதவியாக இருக்கும் .

உறுதியான, பலம் வாய்ந்த கூட்டணியைக் கட்டமைப்பதற்கு எழுதப்படாத சில விதிமுறைகள் உள்ளன. உள்கட்சி மற்றும் கூட்டணியின் பலவீனங்களையும், எதிர்க்கட்சியின் பலத்தையும் புரிந்துகொள்வதுதான் அதன் முதல் படியாகும். இந்த சுயபரிசோதனையினை காங்கிரஸ் உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என்கிறார் சிதம்பரம். பாஜகவின் வெவ்வேறு அமைப்புகளின் வலிமையினை மனதில் கொண்டு, அவற்றை எதிர்கொள்ள காங்கிரஸ் தன் நிறுவன அமைப்புகளின் மறுகட்டமைப்பில் கவனம் செலுத்தவேண்டும். இதுதான், அவர் தனது கருத்தின் மூலம் தெரிவிக்க முயற்சிக்கும் செய்தி.

பல மாநிலங்களில், மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. ஆனால், அம்மாநிலங்களில் அடிமட்ட அமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளை எடுப்பதில் காங்கிரஸ் தவறிவிட்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை. கூட்டணியில் ஒரு பெரிய பழமையான தேசிய கட்சியினுடன் கூட்டணி சேர்வதால், மாநில கட்சிகள் பெரிதும் பயனடைந்துள்ளன.

ஆனால் அதே மாநிலங்களில் பிராந்திய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைப்பதே காங்கிரஸின் வளர்ச்சிக்கு ஒரு பெரும் தடைக்கல்லாக உள்ளது. சிதம்பரத்தின் கூற்றுபடி, காங்கிரஸுக்கு போர்க்கால அடிப்படையில், அதன் நிறுவன அடித்தளத்தை மீண்டும் கட்டியெழுப்புவது அவசியம். மேலும், தம் செயல்பாட்டில் உத்வேகத்தை பெறுவதற்கும், தேவையான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும்.

ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதற்கும், பாஜகவுக்கு வலிமையான மாற்றீட்டை வழங்குவதற்கும் செயல்பாடுகள் தேவை. இத்துடன், மக்களின் நம்பிக்கையை பெற்றதாக உருவான இண்டியா கூட்டணியை வலுப்படுத்துவும் பரந்த முயற்சியுடன் இணைந்து நடக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இண்டியா கூட்டணியில், பல கொள்கைகளின் அடிப்படையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மாநிலக் கட்சிகள் மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தேசிய கட்சிகள், காங்கிரஸுடன் இணைந்துள்ளன.

இதற்கு, அரசியலமைப்பு நெறிமுறைகளைப் பாதுகாத்தல் மற்றும் பன்மைத்துவத்தை ஊக்குவித்தல் என்ற பரந்த தொலைநோக்குப் பார்வை அவசியம். இவை அல்லாமல், இன்று இண்டியா கூட்டணி முரண்பாடுகளால் நிறைந்ததாகத் தெரிகிறது. கூட்டணிக்குள் தங்கள் பங்கு மற்றும் பொறுப்புகள் குறித்து கூட்டணியில் பங்கேற்கின்ற கட்சிகளுக்கு ஒரு தெளிவான சிந்தனை மற்றும் செயல்திட்டம் இல்லாதது போல் தெரிகிறது.

இண்டியா கூட்டணி, பாஜகவுக்கு எதிரான எதிர்ப்பால் மட்டுமே ஒன்றுபட்ட கட்சிகளின் வெறும் கூட்டம் என பொதுமக்களிடம் ஒரு கருத்து நிலவுகிறது. பிரதான ஊடகங்களின் முக்கிய பிரிவுகளின் மீதான பாஜகவின் கட்டுப்பாடு மற்றும் டிஜிட்டல் தளங்களில் அதன் பலமும் இண்டியா கூட்டணியை சந்தர்ப்பவாத கூட்டணி என்று சித்தரிப்பதில் வெற்றியடைந்திருக்கிறது.

சில பிராந்தியக் கட்சிகள் தங்கள் சொந்த மாநிலங்களில் காங்கிரசுடன் முரண்பட்ட கருத்துக்களோடு செயல்படுகின்றன. கேரளா, ஜம்மு காஷ்மீர், டெல்லி, பஞ்சாப், இப்போது மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் இதற்கு தெளிவான உதாரணங்களாகத் திகழ்கின்றன. இம்மாநிலங்களில் இண்டியா கூட்டணி தோல்வியடைந்துள்ளது அல்லது முறிவின் விளிம்பில் உள்ளது.

மகாராஷ்டிராவில், சரத் பவார் மற்றும் அஜீத் பவார் ஆகிய இருவர் தலைமையில் பிரிந்துவிட்ட தேசியவாத காங்கிரஸ் மீண்டும் ஒன்றிணைய முடிவு செய்தால் மேலும் குழப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் "ஆபரேஷன் சிந்தூர்" பற்றி விவாதிக்க, சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தினை கூட்டவேண்டும் என்ற காங்கிரஸ் வலியுறுத்தியது. இதற்கு எதிராக, இது நாட்டினுடைய பாதுகாப்பை பற்றியது என்பதால் பாராளுமன்றத்தை கூட்டவேண்டிய அவசியம் இல்லை என சரத்பவார் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இது கூட்டணி கட்டமைப்பிற்குள் தனது நிலைப்பாட்டை மாற்றுவதைக் குறிக்கிறது. பல்வேறு நாடுகளுக்கு தூதுக்குழுவை அனுப்பும் அரசாங்கத்தின் முயற்சிக்கு காங்கிரஸ் தனது எம்பி.க்களை நியமிப்பது குறித்து சிவசேனாவின் நிதின் ரவுத் கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டணி முறிவுகள், தலைவர்களுக்கு இடையிலான பொது மோதல்கள், பொதுவான குறைந்தபட்ச திட்டம் அல்லது கூட்டு பிரச்சார யுக்திகள் இல்லாதது போன்ற குறைகள் இண்டியா கூட்டணியில் உள்ளன. இவை நம்பகமான தேர்தல் இயந்திரமாக நம் கூட்டணி மாறுவதைத் தடுக்கின்றன.

இதுபோல் வளரும் முரண்பாடுகள் அடுத்த ஆண்டு நடக்க இருக்கின்ற கேரளா மற்றும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்களில் மீண்டும் தலைதூக்கும். அங்கு திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் சிபிஐ(எம்) கட்சிகள் மாறுபட்ட நிலைப்பாடுகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கூட்டணியின் பலவீனமான அடித்தளத்தை மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது

இண்டியா கூட்டணி, ஒருமித்த கருத்தோடு செயல்படாதலால் வலுவிழந்து இப்போது இருக்கிறது என்று சிதம்பரம் கூறியிருந்தார். அதே நேரத்தில், இன்னும் காலம் கடந்துவிடவில்லை, இப்போதும் இண்டியா கூட்டணியை ஒன்றாக இணைத்து, வலுப்பெறச்செய்ய முடியும் என்றும் அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா கூட்டணி நிலைக்கச் செய்து பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்று வெற்றிபெற வேண்டும். இது, எதிர்வினை அரசியலிலிருந்து, பாஜகவைத் தாக்குவதற்கான ஒரு தளமாக மட்டும் இல்லாமல், அன்றாட மக்கள் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட பிரச்சாரத்திற்கு மாற வேண்டும்.

இந்திய பொருளாதார சரிவு, விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் பிரச்சினை மற்றும் மேம்பாடு, சிறு, குறு மத்திய தொழில் முனைவோர் மற்றும் வணிகர்கள், அன்றாடம் சந்திக்கின்ற கடன் பெறுவதில் வங்கிகளின் ஒத்துழையாமை, ஜிஎஸ்டி பிரச்சனைகள், வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், மற்றும் அரசியல் அமைப்பு சட்டத்தினை எதிர்கொண்டிருக்கும் சவால்கள், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான மத்திய அரசின் போக்கு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

இண்டியா கூட்டணியை வெறும் தேர்தல் கூட்டணியாக அன்றி, இந்திய அரசியலில் ஒரு நம்பகமான மாற்று சக்தியாக மாற்ற வேண்டிய நேரம் இது. ப.சிதம்பரத்தின் கருத்துக்கள், சரியான மனநிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டால், காங்கிரஸுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இண்டியா கூட்டணிக்கும் அதன் போக்கைத் திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதாக அமையும்.

இக்கட்டுரையாளர் காங்கிரஸ் ஊடகப்பிரிவின் முன்னாள் தலைவர் மற்றும் தற்போதைய தேசிய செய்தி தொடர்பாளர்களில் ஒருவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x