Published : 27 May 2025 07:22 AM
Last Updated : 27 May 2025 07:22 AM
தாஹோத்: இந்தியாவை வெறுப்பதும் அதற்கு தீங்கு விளைவிக்கும் வழிகளைப் பற்றி யோசிப்பதும்தான் பாகிஸ்தானின் ஒரே நோக்கமாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக குஜராத் மாநிலத்துக்கு நேற்று வருகை தந்தார். இந்நிலையில் தாஹோத் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியதாவது:
கடந்த 2014-ம் ஆண்டு இதே தினத்தில் (2014, மே26) முதல் முறையாக பிரதமராக பதவியேற்றேன். அப்போது முதல் நாட்டின் வளர்ச்சி ஒன்றை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறேன். நாடு முழுவதும் 70 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இப்போது இயக்கப்படுகின்றன. கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
நமது நாடு வறுமையை ஒழித்து பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ள நிலையில், இந்தியாவை வெறுப்பதும் அதற்கு தீங்கு விளைவிக்கும் வழிகளைப் பற்றி யோசிப்பதும்தான் பாகிஸ்தானின் ஒரே நோக்கமாக உள்ளது. நமது சகோதரிகளின் சிந்தூரை(குங்குமம்) துடைக்கத் துணிபவர்கள் தங்கள் முடிவு நெருங்கிவிட்டது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரில் உள்ள பஹல்காமில் 26 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து மே 7-ம் தேதி அதிகாலையில் இந்தியா ஆபரேஷன் சிந்தூரைத் தொடங்கியது. இதன் விளைவாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத உள்கட்டமைப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, அது நம் உணர்ச்சிகளின் வெளிப்பாடு.
பிரிவினைக்குப் பிறகு உருவான நாடு இந்தியாவின் மீதான வெறுப்பை உமிழ்கிறது. அது பாரதத்துக்கு தீங்கு விளைவிக்க மட்டுமே விரும்புகிறது. இருப்பினும், இந்தியாவின் இலக்குகள் வறுமையை ஒழித்தல், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துதல் மற்றும் வளர்ந்த நாடாக மாற்றுவதே ஆகும்.
ஹோலி, தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகளின்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டும். ஸ்மார்ட்போன்கள், வாகனங்கள், பொம்மைகள், ஆயுதங்கள், மருந்துகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்கிறோம். இது நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விஷயங்கள் ஆகும்.
நமது பாரத நாட்டின் முன்னேற்றத்துக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டும். இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற, இந்தியர்கள் 140 கோடி பேரும் பாடுபடுகின்றனர். இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு உள்கட்டமைப்பு வசதிகளை நாம் மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் மீது மலர் தூவி வரவேற்பு: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து ஊடகங்களுக்கு விளக்கம் கொடுத்தவர்களில் ராணுவ கர்னல் சோஃபியா குரேஷியும் ஒருவர். இந்நிலையில் வதோதராவில் நேற்று நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற பிரதமர் மோடி மீது, குரேஷியின் குடும்பத்தினர் ஒரு மேடையில் இருந்தபடி மலர்களைத் தூவி வரவேற்றனர். அவரது பெற்றோர், சகோதரர் முகமது சஞ்சய் குரேஷி, சகோதரி ஷைனா சன்சாரா ஆகியோர் வரவேற்பில் பங்கேற்றனர். இதுதொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன.
மேலும் ஏராளமான பொதுமக்களும் தேசியக்கொடி ஏந்தியபடி மோடி மீது மலர்களை தூவினர். பொதுமக்களை பார்த்து அவர் உற்சாகமாக கையசைத்தபடியே சென்றார். பின்னர், பிரதமர் மோடியை, குரேஷியின் பெற்றோரும் குடும்பத்தினரும் சந்தித்துப் பேசினர். இதுகுறித்து குரேஷியின் தந்தை தாஜ் முகமது குரேஷி பேசும்போது, ‘‘எங்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்தார். நாங்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டோம். பிரதமரை சந்தித்தது மிகவும் உணர்வுப்பூர்வமாக அமைந்துள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT