Published : 27 May 2025 01:18 AM
Last Updated : 27 May 2025 01:18 AM

ரூ.44,000 கோடியில் கண்ணிவெடி அகற்றும் திட்டம்: சீனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்தியா மீண்டும் தொடக்கம்

கப்பல் போக்குவரத்தை சீர்குலைக்க எதிரிப் படைகளால் கடலுக்கடியில் வைக்கப்பட்ட கண்ணிவெடிகளை கண்டறிந்து அழிக்க 12 சிறப்பு போர்க்கப்பலை உள்நாட்டிலேயே உருவாக்குவதற்கான நீண்ட காலமாக நிலுவையில் உள்ள திட்டத்தை இந்தியா மீண்டும் மும்முரமாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அண்டை நாடான சீனாவுடன் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் இந்தியா இந்த நடவடிக்கையை தொடங்க உள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: எதிரி நாட்டு படைகளால் துறைமுகங்களை அழிக்கவும், கப்பல் போக்குவரத்து மற்றும் கடல்சார் வணிகத்தை சீர்குலைக்கவும் நீருக்கடியில் வைக்கப்படும் கண்ணிவெடிகளை கண்டறிந்து அகற்றவும், கண்காணிக்கவும் கடற்படைக்கு ரூ.44,000 கோடியில் 12 மேம்படுத்தப்பட்ட கண்ணிவெடி கப்பல்களை (எம்சிஎம்வி) கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்டம் விரைவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கவுன்சிலின் முன் வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட உள்ளது.

பின்னர் இதற்கான டெண்டரில் இந்திய கப்பல் கட்டும் தளங்கள் தொழில்நுட்ப வணிக ஏலங்களை சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு முதல் எம்சிஎம்வி பயன்பாட்டுக்கு வர குறைந்தபட்சம் 7-8 ஆண்டுகள் ஆகும்.

இந்திய பெருங்கடல் பகுதிக்கு வழக்கமாக வரும் சீன அணுசக்தி மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் சத்தமின்றி கண்ணிவெடிகளை நீருக்கடியில் வைக்கக்கூடியவை. மேலும், சீனா பாகிஸ்தானுக்கு 8 புதிய யுவான்- கிளாஸ் டீசல்-மின்சார நீர்மூழ்கிக் கப்பல்களை பாகிஸ்தானுக்கு வழங்க உள்ளது. இது, அந்த நாட்டின் கடற்படை போர் திறனை மேலும் அதிகரிக்கும். இந்த சூழ்நிலையில்தான் கண்ணிவெடி அகற்றும் கப்பலை கொள்முதல் செய்யும் திட்டத்தை இந்தியா தீவிரப்படுத்தி உள்ளது. இவ்வாறு பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய கடற்படையிடம் தற்போது ஒரு எம்சிஎம்வி கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன் 6 கார்வார் கிளாஸ் மற்றும் பாண்டிச்சேரி கிளாஸ் கண்ணிவெடி கப்பல்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே படிப்படியாக ஓய்வுபெற்று விட்டன.

13 பெரிய துறைமுகங்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட சிறிய துறைமுகங்களைக் கொண்ட நமது நாட்டின் 7,516 கி.மீ. நீளமுள்ள கடற்கரையைப் பாதுகாக்க இந்தியாவுக்கு 24 எம்சிஎம்வி-க்கள் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x