Published : 26 May 2025 01:18 PM
Last Updated : 26 May 2025 01:18 PM
வதோதரா: குஜராத்தின் வதோதரா நகரில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோ இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இதில் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்னல் சோபியா குரேஷியின் குடும்பத்தினர் பங்கேற்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, வதோதராவில் வாகனப் பேரணி நடத்தினார். அப்போது, சாலையின் இருபுறமும் ஏராளமான மக்கள் காத்திருந்து அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர். சாலையோரத்தின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மேடையில் கர்னல் குரேஷியின் குடும்பத்தினர் நின்றுகொண்டு பிரதமரின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தனர். பிரதமரின் வாகனம் அவர்கள் அருகே வந்தபோது, அவர்கள் பூக்களை பிரதமர் மோடி மீது தூவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிரதமரும் அவர்களைப் பார்த்து கைகளை அசைத்தவாறு மகிழ்ச்சி தெரிவித்தார்.
கர்னல் குரேஷியின் தந்தை, தாய், சகோதரர், சகோதரி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு பிரதமருக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கர்னல் சோபியா குரேஷியின் சகோதரி ஷைனா சன்சாரா, “பிரதமர் மோடியை சந்தித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காக பிரதமர் மோடி நிறைய செய்துள்ளார். சோபியாவும் நானும் இரட்டை சகோதரிகள். எனது சகோதரி நாட்டிற்காக ஏதாவது செய்யும்போது, அது எனக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் உத்வேகம் அளிக்கிறது. அவர் இனி என் சகோதரி மட்டுமல்ல, நாட்டின் சகோதரியும் கூட.” என்று கூறினார்.
மேலும் அவர், “நமது பிரதமர் எப்போதும் நம்முடன் இருக்கிறார் என்பதை அவர் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு உறுதி செய்து வருகிறார். இது பெருமைக்குரிய விஷயம். இன்று, பிரதமர் மோடியின் சாலை நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பிரதமர் மோடியின் தலைமையில், இவ்வளவு பெரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் பத்திரிகையாளர் சந்திப்பை இரண்டு பெண்கள் செய்தனர். என் சகோதரி கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங். இது பெண்கள் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல என்பது உலகிற்கு ஒரு செய்தியாக இருந்தது.” என்று அவர் தெரிவித்தார்.
கர்னல் குரேஷியின் சகோதரர் சஞ்சய் குரேஷியும், ஆபரேஷன் சிந்தூரின் முக்கியத்துவம் குறித்த தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். “பிரதமர் மோடி இங்கு வந்தபோது அது ஒரு சிறந்த தருணமாக எங்களுக்கு இருந்தது. நாங்கள் அவரை முதல் முறையாகப் பார்த்தோம். சைகைகள் மூலம், அவர் எங்களை வரவேற்றார். என் சகோதரிக்கு இந்த வாய்ப்பை வழங்கிய நமது பாதுகாப்புப் படைகள் மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு நான் நன்றி கூறுகிறேன். மிகவும் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக, பெண்களே பழிவாங்கி இருக்கிறார்கள். இதைவிட சிறந்தது வேறு என்ன இருக்க முடியும்?.” என்று அவர் குறிப்பிட்டார்.
“பிரதமர் மோடி எங்களை அங்கீகரித்து மரியாதையுடன் வரவேற்றார். பதிலுக்கு நாங்களும் அவரை மரியாதையுடன் வரவேற்றோம்.” என்று கர்னல் சோபியா குரேஷியின் தந்தை தாஜ் முகமது குரேஷி தெரிவித்தார்.
கர்னல் சோபியா குரேஷியின் தாயார் ஹலிமா குரேஷி, “நாங்கள் அவரை மலர்களால் வரவேற்றோம். அனைவரும் ஒன்றாக அவரை வரவேற்பது மிகவும் நல்ல விஷயம். அவர் நமது நாட்டின் பிரதமர், எனவே அவரை வரவேற்க வேண்டும். சோபியா எங்கள் மகள் மட்டுமல்ல, நமது நாட்டின் மகள், அவர் செய்ததெல்லாம் மிகவும் நல்லது, அதை நாம் முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும்.” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT